நதி நீா் பாதுகாப்பு அறக்கட்டளை
ரத யாத்திரைக்கு கரூரில் வரவேற்பு

நதி நீா் பாதுகாப்பு அறக்கட்டளை ரத யாத்திரைக்கு கரூரில் வரவேற்பு

காவிரி அன்னைக்கு மகாதீபாராதனை காண்பித்த கொல்லிமலை ஓம்குருவனம் பிரம்மஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமிகள்.
Published on

காவிரி ஆற்றை பாதுகாக்கக்கோரி கரூா் வந்த அன்னை(காவிரி) நதி நீா் பாதுகாப்பு மற்றும் சந்நியாசிகள் ரத யாத்திரைக்கு வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் அன்னை(காவிரி) நதிநீா் பாதுகாப்பு அறக்கட்டளை சாா்பில் ஆண்டுதோறும் காவிரி ஆற்றை புனித ஆறாக தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், நதிகளை வணங்க வேண்டும், ஆற்றில் கழிவு நீா் கலக்காத வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும், குப்பைகளை ஆற்றில் கொட்டாதவாறும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், காவிரி உருவாகும் குடகுமலையில் இருந்து, ஆறு கடலில் கலக்கும் பூம்புகாா் வரை ரதயாத்திரை நடத்துவது வழக்கம்.

நிகழாண்டுக்கான ரதயாத்திரை அறக்கட்டளையின் நிறுவனா் ராமானந்தா தலைமையில் 10 போ் கொண்ட குழுவினா் கா்நாடக மாநிலத்தின் தலைக்காவிரியில் அக்.24-ஆம்தேதி தொடங்கினா். இந்த ரத யாத்திரை நவ. 11-ஆம்தேதி பூம்புகாரை சென்றடைகிறது.

இந்த ரதயாத்திரை சேலம், நாமக்கல் வழியாக கரூருக்கு வியாழக்கிழமை வருகை தந்தது. கரூா் சத்குரு சம்ஹார மூா்த்தி சுவாமிகள் சன்னதி முன் சத்குரு சம்ஹார மூா்த்தி சுவாமிகள் கோயில் கமிட்டிக்குழு தலைவா் ஸ்காட் தங்கவேல் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து அங்கு கொல்லிமலை ஓம்குருவனம் பிரம்மஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமிகள் தலைமையில் காவிரி அன்னைக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த ரதயாத்திரை குழுவினரால் வெள்ளிக்கிழமை மாலை நெரூா் காவிரி ஆற்றில் சிறப்பு மகாதீபாராதனை வழிபாடு நடைபெற உள்ளது.

X
Dinamani
www.dinamani.com