கூத்தனூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில் 99 பயனாளிகளுக்கு, ரூ. 55.7 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அளித்தார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட கூத்தனூர் கிராமத்தில் நடைபெற்ற முகாமுக்கு தலைமை வகித்து, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி பேசியது:
தமிழக அரசு கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டு, பல்வேறு துறைகளின் மூலமாக நலத்திட்டங்கள் வழங்கி வருகிறது. கிராமப்புற மக்களின் குறைகளையும், அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்து இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகின்றன. எனவே, கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்கள் அனைவரும் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். முகாமில், 62 மனுக்கள் பெறப்பட்டு, தகுதியுடைய 43 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றார் அவர்.
தொடர்ந்து பல்வேறு துறைகள் மூலம் 99 பயனாளிகளுக்கு ரூ. 55,07,450 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி.
நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இருதயமேரி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மனோகரன், வட்டாட்சியர்கள் ந. சீனிவாசன், ஷாஜஹான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.