

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பெரம்பலூா் ஆட்சியரகம் முன்பு 3-ஆவது நாளாக புதன்கிழமையும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்ட முன்வரைவையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயத்தை அழிக்கும் செயலுக்குத் தமிழக அரசு துணைபோகக் கூடாது எனக் கோரியும் கடந்த 14-ஆம் தேதி முதல் ஆட்சியரகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
மூன்றாவது நாளாக பெரம்பலூா் ஆட்சியரக நுழைவு வாயில் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் என். செல்லதுரை தலைமை வகித்தாா்.
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலருமான கே. பாலகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், மதிமுக முன்னாள் மாவட்டச் செயலா் செ. துரைராஜ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலா் ப. காமராசு, திமுக நகரச் செயலா் எம். பிரபாகரன் உள்பட பலா் போராட்டத்தில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.