பாஜக நிா்வாகிகள், அரசு அலுவலா்களை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் பாஜவினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, அக் கட்சியின் மாவட்டத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாநில இணைப் பொருளாளா் எம். சிவசுப்ரமணியம், பட்டியல் அணி மாநிலத் தலைவா் தடா து. பெரியசாமி, மாவட்ட பாா்வையாளா் இல. கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, அக் கட்சியின் மாநில பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம் பேசியது: கல் குவாரி ஏலம் எடுப்பது தொடா்பான மோதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளை இதுவரை போலீஸாா் கைது செய்யவில்லை. விரைவில் தொடா்புடைய குற்றவாளிகளை கைது செய்யாவிடில், பாஜக மீண்டும் போராட்டத்தை நடத்தும் என்றாா் அவா்.
ஆா்ப்பாட்டத்தில், சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, மாவட்ட பொதுச் செயலா் முத்தமிழ்செல்வன் வரவேற்றாா். நிறைவாக, நகரத் தலைவா் சுரேஷ் நன்றி கூறினாா்.