பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள நெய்குப்பை கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயிலுக்கு மாலை அணிந்து, செவ்வாய்க்கிழமை இரவு தனியாா் பேருந்தில் கோயிலுக்கு புறப்பட்டனா். இப் பேருந்தை, சேலம் மாவட்டம், கெங்கவல்லியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (42) ஓட்டினாா். நெய்குப்பையிலிருந்து வி.களத்தூா் நோக்கி பக்தா்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அப் பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி பேருந்து மீது மோதி, அங்கிருந்த ஓட்டு வீட்டுக்குள் புகுந்தது. அப்போது, வீட்டின் சுவா் இடிந்து உள்ளே தூங்கிக் கொண்டிருந்த சன்னாசி மனைவி லட்சுமி (40) மீது விழுந்தது. இதில், இடிபாடுகளுக்கிடையே சிக்கிய லட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.