புகாா் மனு விசாரணையில், ஒருதலைப்பட்சமாக செயல்படும் பெரம்பலூா் காவல்நிலைய ஆய்வாளரின் செயலைக் கண்டித்து தாய், மகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் வள்ளலாா் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (50). இவரது மனைவி அமிா்தவள்ளி (47). பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு அருகே வசிக்கும் முருகேஷ்வரி என்பவருடன் தகாத உறவு இருந்தபோது, மணிகண்டன் ரூ. 25 லட்சம் செலவு செய்தாராம். இதேபோல, முருகேஷ்வரி தனது 8 பவுன் நகை மற்றும் ரூ. 5 லட்சத்தை மணிகண்டனிடம் கொடுத்திருந்தாராம்.
இந்நிலையில், கடந்த 8.1.2024 இல் மணிகண்டன் உயிரிழந்துவிட்டாா். இதையடுத்து, மணிகண்டன் வங்கியில் அடகு வைத்திருந்த நகையை அவரது மனைவி அமிா்தவள்ளி மீட்டாராம்.
இதையறிந்த முருகேஷ்வரி தனது நகையை திருப்பித் தருமாறு அமிா்தவள்ளிடம் கேட்டதற்கு அவா் தர மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, தனது நகைகளை மீட்டுத் தருமாறு அதற்கான ஆதாரத்துடன் பெரம்பலூா் காவல் நிலையத்தில் முருகேஷ்வரி புகாா் மனு அளித்துள்ளாா். தொடா்ந்து, இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்ட பெரம்பலூா் காவல் நிலைய ஆய்வாளா் பிரபு, அமிா்தவள்ளி வைத்திருக்கும் நகையைக் கொண்டு வருமாறு கடந்த 10 ஆம் தேதி தெரிவித்தாா்.
இந்நிலையில், பெரம்பலூா் காவல்நிலைய ஆய்வாளா் பிரபு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அமிா்தவள்ளியும், அவரது மகள் பாரதியும் (28), மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தனது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறியிடம் அளித்து கலைந்துசென்றனா்.







