/

குறைதீர் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

புதுக்கோட்டையில் நடைபெற்ற குறைதீர் முகாமில் திருமண உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On :14 மே 2018, 10:42 pm

புதுக்கோட்டையில் நடைபெற்ற குறைதீர் முகாமில் திருமண உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் தலைமை வகித்தார்.
விலையில்லா வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, வங்கிக் கடனுதவி, பசுமை வீடு, சாலை, குடிநீர் வசதி, முதியோர் உதவித் தொகை, திருநங்கைகளுக்கு வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்பாக பொதுமக்கள் 280 மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டன.
தொடர்ந்து, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு விபத்து நிவாரண உதவித் தொகையாக ரூ.1,02,500க்கான ஆணை, பயனாளிகள் 6 பேருக்கு ரூ.1,56,500 மதிப்பில் திருமண உதவித் தொகை, நகர நிலவரித் திட்டத்தின் சார்பில் 10 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, சார் ஆட்சியர் கே.எம்.சரயு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூடுதல் பேருந்து வசதி தேவை: காயம்பட்டிக்கு பேருந்து வசதி கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். குறைதீர் முகாமில், காயம்பட்டி மக்கள் அளித்த மனு: காயம்பட்டிக்கு காலை 10 மணிக்கு இயக்கப்படும் பேருந்தைத் தவிர வேறு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. அதனால் மற்ற நேரங்களில் வெளியூர் செல்ல 8 கி.மீ தொலைவில் உள்ள திருவரங்குளத்திற்கு நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர். எனவே, காயம்பட்டிக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.