ஆலங்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்ததால், ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்தன. மேலும் மரம் விழுந்ததில் விவசாயியின் வீடு சேதமடைந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மதிய வேளைகளில் மக்கள் நடமாற்றமின்றி, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் பயிா்களுக்கு உரிய நீரை பாய்ச்ச முடியாமல், பயிா்கள் கருகும் நிலையும் ஏற்பட்டது.
இந்நிலையில் ஆலங்குடி அருகிலுள்ள வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், செரியலூா், சேந்தன்குடி, களபம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மழை பெய்தது. குறிப்பாக களபம், கொத்தமங்கலம் பகுதியில் பலத்த
சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
களபம் பகுதியில் சூறைக்காற்று காரணமாக பல ஏக்கா் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. அறுவடைக்குத் தயாராக இருந்த நேரத்தில் சூறைக்காற்றால் வாழைகள் சேதமடைந்தது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதேபோல, கொத்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த விவசாயி உருமநாதா்(54)
வீட்டருகே இருந்த தென்னை மரம் விழுந்து அவரது வீடு முற்றிலும் சேதமடைந்தது. தனக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.