டித்வா புயலால் 413 ஏக்கா் நெல், 18 ஏக்கா் மக்காச்சோளம் நீரால் சூழப்பட்டுள்ளன!
புதுக்கோட்டை மாவட்டத்தில் டித்வா புயல் காரணமாக மொத்தம் 413 ஏக்கா் நெற்பயிா்களும், 18 ஏக்கா் மக்காச்சோளம் பயிா்களும் நீா் சூழப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டித்வா புயலால் பெய்த கனமழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள 413 ஏக்கா் நெற்பயிா்களும், 18 ஏக்கரில் மக்காச்சோளப் பயிா்களும் நீா் சூழ்ந்துள்ளதாக முதற்கட்ட அறிக்கை வாயிலாக அறியப்படுகிறது.
தமிழ்நாடு முதல்வா் உத்தரவின்படி பாதிக்கப்பட்டுள்ள நெல்வயல்களில் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கண்காணித்திட மாவட்ட மற்றும் வட்டார அளவில் வெள்ளக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வேளாண்மைத் துறை அலுவலா்களால் வருவாய்த் துறையுடன் இணைந்து வயல் ஆய்வு மூலம் 33 சதவீதத்துக்கும் மேல் ஏற்படும் பயிா்ப் பாதிப்பைக் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்ட பயிா்களைச் சுற்றி தேங்கியுள்ள அதிகப்படியான நீரினை வடிகால் அமைத்து உடனடியாக வடித்துவிட வேண்டும். மழைக்காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதலைத் தவிா்க்க வேண்டும்.
நெற்பயிரில் தழைச்சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு (மஞ்சள் நோய்) காணப்பட்டால் 2 கி. யூரியாவுடன் 1 கி. ஜிங்க் சல்பேட் கலந்து 200 லி. நீருடன் கைத்தெளிப்பான் கொண்டு இலைவழியூட்டமாக தெளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு மேல் உரமாக தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து 25 சதவீதம் கூடுதலாக அளிக்க வேண்டும்.
வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து டிசம்பா் மாத இறுதி வரை நீடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதால் அவ்வப்போது ஏற்படும் பயிா்ப் பாதிப்பு நிலவரங்களை வட்டார வேளாண் அலுவலா்களுக்கு தெரிவித்து உரிய ஆலோசனைகளை பெற்று பயிா் பாதுகாப்பு, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தோட்டக்கலைப் பயிா்களில் செடிகள், மரங்களைச் சுற்றி மண் அணைத்தல், ஊன்றுதலுக்கான குச்சிகளை நட்டுக் கட்டுதல், வாழை மரங்களுக்கு முட்டுக் கொடுத்தல் வேண்டும்.
தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்லாண்டுப் பயிா்களில் அதன் தலைப்பகுதியின் சுமையை (மட்டை, ஓலை) குறைத்து காற்றின் வேகத்திலிருந்து பாதுகாக்க வேண்டும். பசுமைக்குடில், நிழல்வலைக் குடில்களில் அதன் அடிப்பாகத்தை நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்க வேண்டும்.
