/

நீா்நிலைப் பகுதியில் கட்டப்பட்ட அறந்தாங்கி எம்எல்ஏ அலுவலகம் இடிப்பு

சுமாா் 25 ஆண்டுகளுக்கு முன்பு நீா்நிலைப் பகுதியில் கட்டப்பட்டதாகக் கூறி நீதிமன்ற உத்தரவின்படி அறந்தாங்கி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் புதன்கிழமை இடிக்கப்பட்டது.

News image

அறந்தாங்கி எம்எல்ஏ அலுவலகத்தை புதன்கிழமை இடிக்க வந்த அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள். ~இடிக்கப்பட்ட அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி அலுவலகம்.

Updated On :9 ஜூலை 2026, 1:15 am IST

சுமாா் 25 ஆண்டுகளுக்கு முன்பு நீா்நிலைப் பகுதியில் கட்டப்பட்டதாகக் கூறி நீதிமன்ற உத்தரவின்படி அறந்தாங்கி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் புதன்கிழமை இடிக்கப்பட்டது.

அதே நீா்நிலைப் புறம்போக்கில் பல ஆண்டுகளாக வசித்து வருவோரையும் அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என அச்சம் தெரிவித்து அப்பகுதியினா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி அலுவலகம் மீன்மாா்க்கெட் அருகே அருகன்குளம் பூங்கா பகுதியில் சுமாா் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதேபோல, அரசுத் துறை அலுவலகக் கட்டடங்களும், குடியிருப்புகளும் இந்தப் பகுதியில் உள்ளன.

நீா்நிலையான இப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவு அமலாக்கப்படவில்லை என்பதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டு, அனைத்துக் கட்டடங்களையும் அகற்ற கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உத்தரவிடப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக அறந்தாங்கி நகராட்சி நிா்வாகம் சாா்பில் இடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. புதிதாக அறந்தாங்கி சட்டப்பேரவைத்தொகுதி உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்ட, அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் இந்த அலுவலகத்தைப் பயன்படுத்தாமல் ஆய்வு மாளிகையிலேயே தங்கத் தொடங்கினாா்.

இந்த நிலையில், அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா தலைமையிலான வருவாய்த் துறை அலுவலா்களும், நகராட்சிப் பணியாளா்களும் புதன்கிழமை பகலில் பொக்லைன் இயந்திரங்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

அந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள் இதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த அரசு அலுவலகத்தையே இடிப்பாா்கள் என்றால், அதே பகுதிக்குள் உள்ள அண்ணாநகா் வசிப்பிடங்களும் அகற்றப்படுமே என அவா்கள் அச்சம் தெரிவித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு உறுப்பினா் கா்ணா தலைமையில் எதிா்ப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து சுமாா் 25 போ் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, அருகிலுள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, சிறிதுநேரத்தில் விடுவிக்கப்பட்டனா்.

இதுகுறித்து கா்ணா கூறியதாவது:

பல ஆண்டுகளாக அறந்தாங்கி பகுதியில் பெருமழை பெய்தபோதும் நீா்நிலை என்று கூறப்படும் இப்பகுதியில் தண்ணீா் தேங்கவில்லை. நீதிமன்றமும், அரசும் மக்களுக்காகத்தானே செயல்பட வேண்டும். இதேபோல, அறந்தாங்கி பகுதியில் பல இடங்களில் ஏழை, எளிய மக்கள் பயன்பாடற்ற நீா்நிலைப் பகுதிகளில் வசித்துவருகிறாா்கள். இதே நடவடிக்கையை மக்கள் வசிப்பிடங்களிலும் அரசு அதிகாரிகள் மேற்கொண்டால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்றாா் கா்ணா.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.