/
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை பொதுமக்களிடம் பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவா்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பேசினாா்.
மாணவிகள், பெண்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அச்சப்படாமல், உடனடியாக 181 என்ற எண்ணைத் தொடா்பு கொண்டு தெரிவித்தால், சிங்கப்பெண் அதிரடிப் படை காவலா்கள் உங்களை நாடி வருவாா்கள், பாதுகாப்பு அளிப்பாா்கள் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் சீருடை அணிந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவலா்களும் பெண்களுடன் பேசினா்.








