பேராவூரணியில் பேரூராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகளை பறிமுதல் செய்ததோடு, விதி மீறியோருக்கு அபராதமும் விதித்தனர்.
ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், கேரி பைகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடைக்கு பிறகு பிளாஸ்டிக் பயன்பாடு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், பேராவூரணியில் ஒருசில கடைகளில் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்தன.
இதன் அடிப்படையில், பேரூராட்சி செயல் அலுவலர் மு.பொன்னுசாமி உத்தரவின் பேரில், தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம் தலைமையில் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சிக்கு சொந்தமான மீன், இறைச்சி மார்க்கெட் மற்றும் கடைவீதியில் உணவகங்கள், பழக்கடைகள், தேநீர் கடைகள் ஆகியவற்றில் திடீர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, சில கடைகளில் தடையை மீறி உணவுப் பொருள்களை பொட்டலம் கட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டு, 35 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தடையை மீறி அவற்றை பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு ரூ. 12 ஆயிரத்து 500 அபராதமாக விதிக்கப்பட்டது.
இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறியது: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை, குடிநீர், சொத்துவரி மற்றும் இதரக் கட்டணங்களை தாமதமின்றி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக வாடகை செலுத்த தவறினால் கடைகள் பூட்டப்பட்டு ஏலம் விடப்படும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








