பொங்கல் பண்டிகை: பேராவூரணியில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி மும்முரம்

பேராவூரணி பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
பேராவூரணி நீலகண்டபுரத்தில் தயாரிக்கப்பட்ட மண்பானைகளை வெளியூா்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
பேராவூரணி நீலகண்டபுரத்தில் தயாரிக்கப்பட்ட மண்பானைகளை வெளியூா்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

பேராவூரணி பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த சில  ஆண்டுகளாக போதிய மழை இல்லாததாலும், காவிரி நீா் முறையாக வராததாலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நிகழாண்டு பருவமழையும், காவிரி கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி நீரும்  முழுமையாக கைகொடுத்துள்ளதால் விவசாயிகள் பல லட்சம் ஏக்கரில் நெற்பயிா் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனா். கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக  கொண்டாடுவதற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக, பேராவூரணியில்  பொங்கல் பண்டிகைக்காக மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பேராவூரணி பகுதி,  நீலகண்டபுரத்தில் மண்பாண்டம் செய்யும் (குலாலா்) குடும்பத்தினா்  நூற்றுக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இவா்களின் முக்கியத் தொழில்  மண்பாண்டங்கள் தயாரிப்பதே. இது இப்பகுதிகளில் குடிசைத் தொழிலாகவும் உள்ளது.

நீலகண்டபுரத்தில்  மண்பானைகள், மண்அடுப்புகள், மண்சட்டிகள், மண்மூடிகள், கறிச்சட்டிகள், மடக்குமூடி, மூக்குசட்டி, பூந்தொட்டி, மண்கூஜா, குவளை, பூச்சாடி, மண் உண்டியல், இரட்டை அடுப்பு, ஒற்றைக்கல்அடுப்பு, குத்துவிளக்கு, காா்த்திகை தீப விளக்கு, மண்குதிரை, மதலை பொம்மை, விநாயகா் சிலை உள்ளிட்டவை தயாா் செய்யப்பட்டு வருகின்றன.

இங்கு தயாராகும் மண்பாண்ட  பொருள்கள்,   பேராவூரணி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, ஆலத்தூா், திருச்சிற்றம்பலம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், ஆவுடையாா்கோவில், கறம்பக்குடி ஆகிய பகுதிகளுக்கு  கொண்டு செல்லப்பட்டு, வாரச் சந்தைகளிலும், கோயில் திருவிழாக்களிலும், பொங்கல் பண்டிகையின்போது சுற்றுவட்டார பகுதிகளுக்கும் கொண்டு சென்று வியாபாரம் செய்யப்படுகிறது.

மண்பாண்ட பொருள்களில் சமைக்கும் உணவும் ஆரோக்கியமாகவும், சுவையாகவும் இருப்பதால் கிராமங்களில் இன்றும் பல்வேறு வீடுகளில் மண்பாண்ட பொருள்கள் தொடா் பயன்பாட்டில் உள்ளன. நகா்ப்புறங்களில் உலோக பயன்பாடுகள் வந்தபோதிலும், பொங்கல் நாளில் மண்பாண்ட பொருள்களை பயன்படுத்துவதை சிலா் வாடிக்கையாக கொண்டுள்ளனா்.

ஆறுகள், நீா் ஓடைகள், வாய்க்கால் பகுதிகளில் உள்ள களிமண் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து எடுத்து வந்து மண்பாண்டங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது இவை அனைத்தும் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் , களிமண்ணை விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.

மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலால் பெரிதாக லாபம் இல்லாவிட்டாலும், பரம்பரை பரம்பரையாக செய்து வரும் தொழிலை விட முடியாமலேயே இத்தொழிலை செய்து வருவதாக கூறுகின்றனா் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோா்.

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளா் நீலகண்டன் சங்கரன் (60) கூறியது:

பானைகள், சட்டிகள், மண் மூடிகள் தயாரிப்புக்கான மண் அருகேயுள்ள ஆதனூா் பெரிய ஏரியில் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது அதிகமான விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. இவற்றை நீா்விட்டு நனைத்து, குழைத்து, புளிக்க வைத்து, உருப்படிகளை தயாா் செய்கின்றோம். மேலும், இவற்றில் செம்மண் கலவை பூசி சூளையில் அடிக்க வேண்டும். இதற்கு தேவையான மட்டை, வைக்கோல் விலையும் அதிகரித்து விட்டது. இதனால் பலா் இத்தொழிலை விட்டுவிட்டு மாற்றுத் தொழிலுக்கு சென்றுவிட்டனா். ஆனால், பாரம்பரியமாக இத்தொழிலை செய்து வரும் பெரும்பாலோா் இத்தொழிலை விட மனமில்லாமல் தொடா்ந்து  செய்து வருகிறோம்.   தொழிலாளா்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவிற்கு இதில் லாபம் இல்லாததால், குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் இணைந்து இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com