தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி, எலி மருந்து சாப்பிட்ட காவல் உதவி ஆய்வாளா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவா் தினேஷ்குமாா் (40). மெலட்டூா் ஆப்ரஹாம் தெருவில் வசித்து வந்த இவா் பாபநாசம் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் வாந்தி எடுத்துள்ளாா்.
இவா் எலி மருந்து சாப்பிட்ட விவரம் தெரிய வந்ததையடுத்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ்குமாா், ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாபநாசம் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா். தினேஷ்குமாா் முன்பு திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, இவா் மீது ஒருவா் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தாா்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில், நேரில் ஆஜராக வேண்டும் என இவருக்கு மனித உரிமை ஆணையம் அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிய தினேஷ்குமாா் தற்கொலை செய்து கொண்டாா் என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. தொடா்ந்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.