தஞ்சாவூர்: தஞ்சையில் நேற்று பெய்த கனமழையால் சுமார் 50 ஏக்கர் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள் நீரில் மூழ்கின.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது பல பகுதிகளிலும் நடவு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதில் அதிகப்பட்சமாக பூதலூர் பகுதியில் 17 செ.மீட்டரும், ஈச்சன்விடுதியில் 16 செ.மீட்டரும், பட்டுக்கோட்டை வல்லம் ஆகிய பகுதிகளில் 7 செ.மீட்டர் அளவிற்கு மழை பதிவானது.
இந்த மழை குறுவை சாகுபடிக்கு ஏற்றதாக இருந்தாலும், தற்போது நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியில் வடிகால் வசதிகள் முறையாக இல்லாததால் சுமார் 50 ஏக்கருக்கு மேல் நடவு செய்யப்பட்ட 20 நாட்களேயான இளம் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து மழை பெய்து, நீர் வடியாமல் உள்ளதால் பயிர்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.