தஞ்சாவூர்: 108 வைணவத் திருத்தலங்களில் 3-வது தலமாக போற்றப்படும் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலின் தேரின் திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானது. ஸ்ரீரங்கம், திருப்பதி திவ்ய தேசங்களுக்கு அடுத்ததாக ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட மூன்றாவது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இவ்விழாவினை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. சாரங்கபாணி சுவாமி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருள திருதேரோட்டமானது தொடங்கியது.
தமிழகத்தின் பெரிய தேர்களில் ஒன்றானது. இதன் உயரம் 110 அடியாகவும், 450 டன் எடையும் கொண்டது. நான்கு குதிரைகள், பிரம்மா தேரினை ஓட்டுவது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.