

தஞ்சாவூர்: தஞ்சையில் பத்தாவது படித்து திருநங்கை ஒருவர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் திருநங்கை சத்யா. இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். சத்யாவின் பெற்றோர்கள், மற்ற பெற்றோர்கள் போல் புறக்கணிக்காமல், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் சத்யாவை விலக்கி வைக்காமல் அன்பு காட்டி அவர் வளர்த்து வந்துள்ளனர். இவை எல்லாம் சத்யாவை தவறான பாதைக்கு இழுத்து செல்லாமல் சமுகப் பணி ஆற்ற தூண்டியது.
சக திருநங்கைகள் உடன் பிரதமர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் குப்பைகள் அகற்றி தூய்மைப் பணி செய்துள்ளார். இதேபோல் பிளாஸ்டிக் இல்லாத நகரம் திட்டத்தில் தஞ்சை பெரியக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தி, பின்னர் வீசி சென்ற பிளாஸ்டிக் பொருள்களை அகற்றி தூய்மைப் பணியில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.
மேலும் கரோனா தொற்று காலத்தில் கரோனா நோயாளிகளை பரிசோதனைக்கு அழைத்துச் செல்வது, உணவு மற்றும் மருந்துகள் வழங்குவது போன்ற சேவை புரிந்துள்ளார். இவரின் சமுகப் பணி அறிந்த, பாண்டிச்சேரியில் உள்ள குளோபல் ஹுயூமன் பீஸ் யூனிவர்சிட்டி (Global Human Peace University) திருநங்கை சத்யாவுக்கு கெளரவ டாக்டர் வழங்கி கெளரவம் அளித்து உள்ளது.
பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள நான் படித்து பட்டம் பெற முடியாவிட்டாலும், இந்த டாக்டர் பட்டம் மூலம் என் பெயருக்கு முன்னால் டாக்டர்(Dr) என போட்டுக் கொள்வது பெருமையாகயும், சந்தோஷமாகவும் இருக்கிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் திருநங்கை சத்யா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.