முன்னாள் அமைச்சர் உபயதுல்லா காலமானார்
தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா (83) உடல் நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
கல்லுக்குளம் பகுதியைச் சேர்ந்த இவர் தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதியில் 1989, 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை வணிகவரித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். திமுகவில் தஞ்சாவூர் நகரச் செயலராக 27 ஆண்டுகள் பணியாற்றிய இவர், தற்போது மாநில வர்த்தக அணித் தலைவராகவும், தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் சீனிவாசபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனது சகோதரியின் பேத்தி திருமணத்துக்குச் செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயக்கமடைந்த இவர் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இவரது மனைவி ஜன்னத்பீவி 2020 ஆம் ஆண்டு காலமானார். மகன் சாந்திமைதீன் 12 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்தினார்.
தற்போது ஒரு மகள் உள்ளார். தஞ்சாவூர் முத்தமிழ் மன்றம் உள்பட பல்வேறு அமைப்புகளில் பொறுப்பு வகித்து வந்த இவர் நீண்ட காலமாக தமிழ்ப் பணி ஆற்றி வந்தார். ஏற்கெனவே இவருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. மேலும் இவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசின் பேரறிஞர் அண்ணா விருதை முதல்வர் வழங்கினார்.