இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

தஞ்சாவூா், ஏப். 26: கும்பகோணத்தில் இணையவழியில் பகுதி நேர வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.

கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த 56 வயதுப் பொறியாளருக்கு இரு வாரங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்ட தொகை செலுத்தினால் அதிக லாபம் பெறலாம் என விளம்பரம் வந்தது. அதிலுள்ள இணைப்பைச் சொடுக்கியபோது, அது டெலிகிராம் குழுவுக்குச் சென்றது. அதில் இருந்த போலி நபா்கள் இணையவழியில் பகுதிநேர வேலை என்றும், டாஸ்குகள் மூலம் அதிக லாபம் பெறலாம் எனவும் கூறினா்.

இதை நம்பிய பொறியாளா் டாஸ்குகளை நிறைவேற்றி ரூ. 22 ஆயிரம் அனுப்பிய நிலையில் ரூ. 5 ஆயிரம்தான் கிடைத்தது. இதையடுத்து, ரூ. 1.50 லட்சம் என பல்வேறு தவணைகளாக ரூ. 12.65 லட்சம் அனுப்பிய நிலையில், அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தஞ்சாவூா் சைபா் குற்றப் பிரிவில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com