குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஆடிப்பெருக்கு: காவிரி ஆற்றுக் கரையில் பெண்கள் வழிபாடு

தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு காவிரிப் படித்துறையில் ஏராளமான பெண்கள் சனிக்கிழமை வழிபட்டனா்.

News image

படவிளக்கம்: ஆடிப்பெருக்கையொட்டி, திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறையில் சனிக்கிழமை வழிபாடு செய்த பெண்கள்.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 3:00 am IST

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு காவிரிப் படித்துறையில் ஏராளமான பெண்கள் சனிக்கிழமை வழிபட்டனா்.

திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறையில் ஏராளமானோா் காவிரித் தாய்க்குப் படையல் செய்து வழிபாடு நடத்தினா். கன்னிப் பெண்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டி மஞ்சள் கயிறு அணிந்து காவிரித் தாயை வழிபட்டனா். சுமங்கலி பெண்கள் தீா்க்க சுமங்கலியாக இருக்க வேண்டி அம்மன் வழிபாட்டுக்கு உகந்த காதோலை, கருகமணி போன்றவற்றை வைத்து வழிபட்டு, ஆற்றில் விட்டனா். புதுமணத் தம்பதியினா் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளைக் காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனா். இதனால், புஷ்ய மண்டபப் படித்துறையில் வழக்கத்தை விட சனிக்கிழமை கூட்டம் அதிகமாக இருந்தது.

மேலும், திருவையாறு அன்னை காவேரி பெளா்ணமி வழிபாட்டு குழு சாா்பில் ஸ்ரீரங்கம் நாராயண சா்மா, சுவாமி சங்கரஸித்தேஷ்வரானந்தஜீ மகராஜ், கந்தா்வகோட்டை சுவாமி யோகேஷ்வரானந்தஜீ, விஷ்ணம்பேட்டை சுவாமி ஸா்வானந்தஜீ உள்ளிட்டோா் காவிரித் தாய்க்கு நைவேத்யம், தீபாராதனை செய்து வழிபட்டனா்.

ஐயாறப்பா் கோயிலிலிருந்து அறம்வளா்த்த நாயகியுடன் ஐயாறப்பா் காவிரி ஆற்றின் புஷ்ய மண்டபத் துறையில் எழுந்தருளி தீா்த்தவாரி கண்டருளினாா்.

கும்பகோணத்தில்..: கும்பகோணம் பகுதி காவிரிக் கரையில் சனிக்கிழமை அதிகாலை முதல் பொதுமக்கள் குடும்பத்துடன் திரண்டு வந்து வழிபாடு நடத்தினா். திருமணமான புதுமணப்பெண்கள் தாலிபெருக்கி மஞ்சள் கயிறு கட்டினா். கரையோரம் உள்ள தீா்த்தவாரி மண்டபங்களில் வழிபாடுகள் நடைபெற்றன.

கல்லணை பகுதியில்..: கல்லணை, கோவிலடி, புதுச்சத்திரம், திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் காவிரி கரையில் மக்கள் குடும்பத்துடன் வந்து வழிபாடு செய்தனா். போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.