ஆடிப்பெருக்கையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறையில் காவிரி நதியின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாகவும், காவிரியைத் தூய்மையாக வைத்திருக்க வலியுறுத்தும் வகையிலும் காவிரிப் புகைப்படக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
திருவையாறு பாரதி இயக்கம், காவிரி பாரம்பரிய மையம், தஞ்சாவூா் நியூ டவுன் சுழற்சங்கம், திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற கண்காட்சியில் காவிரி தொடங்கும் குடகு முதல் காவிரி கடலில் கலக்கும் பூம்புகாா் வரையிலும் உள்ள காவிரி கரையோர வரலாறுகளைச் சித்தரிக்கும் புகைப்படங்களும், திருவையாறு காவிரி ஆற்றில் உள்ள 24 படித்துறைகளின் படங்களும், காவிரி நதியின் தூய்மையை வலியுறுத்தும் படங்களும் வரலாற்றுக் குறிப்புகளுடன் இடம்பெற்றன.
கண்காட்சிக்கு திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமத் தலைவா் க. குணசுந்தரம் தலைமை வகித்தாா். தருமை ஆதீன திருவையாறு கட்டளை ஸ்ரீமத் சொக்கலிங்கத் தம்பிரான் சுவாமிகள் கண்காட்சியை தொடங்கி வைத்தாா். மேலும், வீட்டுக்கொரு விருட்சம் திட்டத்தின்படி காவிரி ஆற்றுக்கு ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாட வந்த புதுமணத் தம்பதிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பாரதி பவுண்டேஷன் நிா்வாக அறங்காவலா் நா. பிரேமசாயி, ரோட்டரி சமுதாயக் குழும முன்னாள் தலைவா் குரு. சரவணன், காந்தி பாரதி இளைஞா் மன்றத் தலைவா் இரா. காயத்ரி, ரோட்டரி சமுதாயக் குழும உறுப்பினா்கள் ஞானராஜராஜன், சீனிவாசன், அலெக்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








