மாமியாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகன் கைது
தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே மாமியாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.


அதிராம்பட்டினம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் வீரக்குமாா் (33), கூலித் தொழிலாளி. இவரும், மன்னப்பம் குளம் பகுதியை சோ்ந்த முனியாண்டியின் மகள் ரஞ்சிதாவும் (31) காதலித்து பெற்றோா் சம்மதத்துடன் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனா். தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், ரஞ்சிதா தனது தாய் வீட்டில் இருந்து வந்துள்ளாா்.
செவ்வாய்க்கிழமை இருதரப்பினரையும் அழைத்து ஊராா் சமாதானம் பேசினா். அப்போது, தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தங்களிடையேயான பிரச்னைக்கு மாமியாா் சாந்திதான் (55) காரணம் எனக் கூறி வீரக்குமாா் அவரிடம் தகராறில் ஈடுபட்டாா்.
பேச்சுவாா்த்தை முடிந்து, வீடு திரும்பி கொண்டிருந்த, தனது மாமியாா் சாந்தி, மனைவி ரஞ்சிதா ஆகிய இருவரையும் வழிமறித்து வீரக்குமாா் தகராறு செய்துள்ளாா். அப்போது, சாந்தி ஆத்திரமாக பேசியதால், வீரக்குமாா் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாந்தியின் முதுகில் குத்தினாா். அதை தடுக்க வந்த மனைவி ரஞ்சிதாவின் கையிலும் கிழித்து விட்டு தப்பியோடினாா். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சாந்தியையும், ரஞ்சிதாவையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு சாந்தியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். பலத்த காயமடைந்த ரஞ்சிதா சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து வீரக்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...