தஞ்சாவூா் மாவட்டத்தில் 2.38 லட்சம் டன் நெல் கொள்முதல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் இதுவரை 2.38 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
Published on

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் இதுவரை 2.38 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் புதன்கிழமை வரை 2.38 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே தேதியில் 1.18 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

தற்போது 261 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் முதல் நவம்பா் வரை 3 மாதங்களுக்கு குறுவை பருவத்தில் 1.28 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் நிகழாண்டு செப்டம்பா் மாதம் முதல் 66 நாள்களில் 2.38 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 ஆயிரம் டன் நெல் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இப்பணிகள் ஒரு வாரத்தில் நிறைவடையும்.

இதுவரை 92 சதவீதம் அதாவது 2.19 லட்சம் டன் நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து இயக்கம் செய்யப்பட்டுள்ளது. முழுவதும் மூடப்பட்ட 25 கிடங்குகளில் 86 ஆயிரத்து 789 டன்னும், மேற்கூரையுடன் கூடிய 9 கிடங்குகளில் 75 ஆயிரத்து 862 டன்னும் என மொத்தம் 1.62 லட்சம் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நாள்தோறும் ஏறத்தாழ 1,000 லாரிகள் நெல், அரிசி இயக்கப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதுவரை 1.62 லட்சம் டன் நெல்லும், 44 ஆயிரத்து 542 டன் அரிசியும் ரயில், சாலை வழியாக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை 47 ஆயிரத்து 594 விவசாயிகளுக்கு ரூ. 574 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com