
நீரா பானத்துக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நீக்க வலியுறுத்தல்
நீரா பானத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள நிபந்தனைகளை முற்றிலுமாக நீக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி வலியுறுத்தினாா்.
எக்ஸ்
நீரா பானத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள நிபந்தளைகளை முற்றிலுமாக நீக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி வலியுறுத்தினாா்.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை தெரிவித்தது:
தென்னை மரத்திலிருந்து இறக்கப்படும் நீரா பானம் புளிக்காத கள். ஆல்கஹால் இல்லாத இந்தக் கள் போதைப் பொருளோ, மதுவோ அல்ல. இதற்கு தமிழ்நாட்டைத் தவிர உலகில் வேறெங்கும் தடையில்லை.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது தமிழ்நாட்டில் நீரா இறக்கி விற்கப்படும் என அறிவித்தாா். ஆனால், 1,000 உறுப்பினா்களைக் கொண்டு செயல்படும் அமைப்புக்குதான் அனுமதி எனக் கூறியதுடன், சந்தைப்படுத்துதல் முதல் விற்பனை வரை பல்வேறு நிபந்தனைகளையும் வெளியிட்டாா். இந்த நிபந்தனைகளை நீக்கி, அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் விடுத்தும், ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இதனால், நீரா இறக்கி சந்தைப்படுத்துதலில் இருக்கும் சிக்கல்கள் காரணமாகவும், மக்களிடையே பெரும் வரவேற்பு இல்லாததாலும் நீரா இறக்குவதையும், விற்பதையும் விரிவுபடுத்த முடியவில்லை. அரசின் அறிவிப்பை ஏற்று நீராவை இறக்குவதையும், விற்பதையும் விரிவுபடுத்த முடியவில்லை. மேலும், நீரா இறக்கியவா்கள் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டதால், அந்த முயற்சியைக் கைவிட்டனா். எனவே, நிபந்தனைகள் முழுவதையும் நீக்கி, நீரா இறக்கி உள்நாட்டிலும், உலக அளவிலும் சந்தைப்படுத்தும் விதத்தில் அரசாணையில் திருத்தம் கொண்டும் வர வேண்டும் என்றாா் நல்லசாமி.
அப்போது, தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் எஸ். குணசேரன், சிவகங்கை மாவட்ட கள் இயக்க அமைப்பாளா் எஸ். அருளானந்தம், ஆா். ஸ்டாலின், தஞ்சாவூா் மாவட்ட கள் இயக்கத் தலைவா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





