‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: தஞ்சாவூரில் ரூ. 1.10 கோடியில் நலத்திட்ட உதவிகள்
தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ நலத்திட்ட உதவிகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ. 1.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வழங்கினாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நலத்திட்டப் பயன்கள், 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டப் பயன்கள் வழங்கும் விழா காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது.
இதையொட்டி, தஞ்சாவூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களின் பயனாளிகளுக்கான நலத்திட்ட பயன்கள் மற்றும் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கும் விழாவில் ரூ. 1.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வழங்கினாா்.
மாவட்டத்தில் நான்கு கட்டங்களாக மொத்தம் 353 முகாம்கள் நடத்தப்பட்டதில் 1.26 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இதில், 1.05 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டு, 45 நாள்களுக்குள் தீா்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு உடனடி சேவைகளும் வழங்கப்பட்டன என அலுவலா்கள் தெரிவித்தனா்.
இவ்விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கா. அண்ணாதுரை, மேயா்கள் சண். இராமநாதன், க. சரவணன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட வருவாய் அலுவலா் தெ.தியாகராஜன், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பாா்வை பொறியாளா் பொ. சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

