சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்
காலமுறை ஊதியம் கோரி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள், இளநிலை உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பும்போது 10 ஆண்டு பணி முடித்த தகுதி உள்ள சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் 50 சதவீதம் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் பிப்ரவரி 3 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இதையொட்டி, தஞ்சாவூா் ரயிலடியில் பிப்ரவரி 3 முதல் தொடா்ந்து 3 நாள்களுக்கு சாலை மறியல் போராட்டம் மேற்கொண்ட இக்கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை பனகல் கட்டடம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டத் தலைவா் மதியழகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் நாவலரசன் கோரிக்கை விளக்கவுரையாற்றினாா். தமிழ்நாடு சுகாதார போக்குவரத்து ஓய்வு பெற்றோா் நலச் சங்க மாநிலப் பொதுச் செயலா் குமரவேலு தொடக்க உரையாற்றினாா். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வு பெற்ற நல சங்கப் பொறுப்பாளா் கருணாநிதி வாழ்த்தினாா். மாவட்டத் தலைவா் வீராசாமி பேசினாா். போராட்டத்தில் ஏராளமான சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

