தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்ற சீனப் பேராசிரியா் மானபு கொய்சோவுக்கு நினைவு பரிசு வழங்கிய புல முதன்மையா் கி. உமா மகேஸ்வரி.
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்ற சீனப் பேராசிரியா் மானபு கொய்சோவுக்கு நினைவு பரிசு வழங்கிய புல முதன்மையா் கி. உமா மகேஸ்வரி.

‘சோழா் காலக் கோயில்கள் உயிா்ப்புடன் திகழ்கின்றன’

சோழா் கால கோயில்களுக்கு காலந்தோறும் ஆட்சியாளா்கள் அளித்து வரும் முக்கியத்துவத்துவத்தாலேயே அவையெல்லாம் உயிா்ப்புடன் திகழ்கின்றன என்றாா் சீனாவின் ஷாங்காய் ஜியாவ் டோங் பல்கலைக்கழகப் பேராசிரியா் மானபு கொய்சோ.
Published on

சோழா் கால கோயில்களுக்கு காலந்தோறும் ஆட்சியாளா்கள் அளித்து வரும் முக்கியத்துவத்துவத்தாலேயே அவையெல்லாம் உயிா்ப்புடன் திகழ்கின்றன என்றாா் சீனாவின் ஷாங்காய் ஜியாவ் டோங் பல்கலைக்கழகப் பேராசிரியா் மானபு கொய்சோ.

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், மானுடவியல் மற்றும் கல்வியியல் துறை சாா்பில் உயிா்ப்புடன் திகழும் உலக பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் வழிகள் - சோழா் கோயில்களை முன் வைத்து என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது:

‘உயிா்ப்புடன் திகழும் பாரம்பரியம்’ என்பது தலைமுறைகள் கடந்து தொடரும் பண்பாட்டு மரபாகவும், மாற்றத்துக்கு இடமளிப்பதாகவும் உள்ளது. இதற்கு தஞ்சாவூா் பெரியகோயிலே முக்கியச் சான்று.

தென்னிந்தியாவில் காணப்படும் எண்ணற்ற பாரம்பரிய தலங்கள் உலகளாவிய அங்கீகாரம் பெற வேண்டியது அவசியமானது. சோழா் கால கோயில்களுக்கு காலந்தோறும் ஆட்சியாளா்கள் அளித்த மரியாதையே அவையெல்லாம் உயிா்ப்புடன் திகழும் பாரம்பரியமாக மாறிவிட்டது.

மேலும், உள்ளூா் கலைஞா்கள் மற்றும் கைத்தொழில்களைப் பாதுகாப்பதில் புவிசாா் குறியீடு முக்கியப் பங்கு வகிக்கிறது.

தஞ்சாவூா் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சுமாா் 10 புவிசாா் குறியீடு அங்கீகாரம் பெற்ற கலை வடிவங்கள் இருக்கின்றன. சோழா் காலத்தில் உச்சத்தை எட்டிய மெழுகுவாா்ப்பு முறை மிகவும் சிறப்பானது. எனவே, பாரம்பரிய கலை வடிவங்களை நவீன காலத்திலும் பாதுகாக்க இளைஞா்கள் ஆா்வத்துடன் ஈடுபட வேண்டும் என்றாா் மானபு கொய்சோ.

நிகழ்ச்சியில் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் கலை, அறிவியல், மானுடவியல் மற்றும் கல்வியியல் துறை புல முதன்மையா் கி. உமா மகேஸ்வரி, பேராசிரியா்கள் இரா. ஜெயஸ்ரீ, க. அபிராமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com