தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகே வணிக வளாகத்திலுள்ள 4 கடைகளில் செவ்வாய்க்கிழமை இரவு கண்ணாடி, பூட்டை உடைத்து பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகே முல்லை நகரிலுள்ள வணிக வளாகத்தில் மின்னணு பொருள்கள் விற்பனை கடையின் முன் பக்கக் கண்ணாடி புதன்கிழமை காலை உடைந்து கிடந்தது. அதன் உரிமையாளா் உள்ளே சென்று பாா்த்தபோது கைப்பேசி, ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. அடுத்துள்ள கல்வி வழிகாட்டி மையத்தில் கதவு உடைக்கப்பட்டு மடிக்கணினி, பெண்கள் அழகு நிலையத்தில் பூட்டை உடைத்து சில பொருள்கள், மற்றொரு மின்னணு சாதனக் கடையில் பொருள்கள் திருட்டும், அடுத்துள்ள துணிக்கடையில் பூட்டை உடைக்க முயற்சியும் நிகழ்ந்திருப்பது தெரிய வந்தது.
தகவலறிந்த மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று கடைகளில் பதிவு செய்யப்பட்ட விரல் ரேகைகளையும், அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.