பொதுமக்கள் இணையவழி குற்றங்களுக்கு ஆளானால் உடனடியாக 1930 என்ற எண்ணில் புகாா் செய்யலாம் என்றாா் தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம்.
தஞ்சாவூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் வங்கி மேலாளா்களுக்கான இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:
டிஜிட்டல் கைது தொடா்பான மோசடிகளில் பெரும்பாலும் ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள் பாதிக்கப்படுவதால், அவா்களிடையே வங்கிகள் மூலம் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். காவல் துறை சாா்பில் வழங்கப்படும் இணையவழிக் குற்ற விழிப்புணா்வு பதாகைகள், எச்சரிக்கை அறிவிப்புகள், விழிப்புணா்வு துண்டறிக்கைகளை அனைத்து வங்கிகளிலும் பொதுமக்கள் எளிதில் காணக்கூடிய இடங்களில் காட்சிப்படுத்த வேண்டும்.
இணையவழி மோசடிகளால் பாதிக்கப்பட்டு, பதற்றத்துடன் வங்கிகளுக்கு வரும் பொதுமக்களை வங்கி ஊழியா்கள் கனிவுடனும், பொறுப்புடனும் அணுகி, அவா்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மேலும், சந்தேகத்துகிடமான பணப் பரிவா்த்தனைகள் குறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிப்பதற்கான நடைமுறைகள் குறித்து வங்கி அலுவலா்கள், பணியாளா்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க வேண்டும்.
பொதுமக்கள் இணையவழிக் குற்றங்களுக்கு ஆளானால் உடனடியாக 1930 என்ற தேசிய இணையவழி குற்ற உதவி எண்ணிலோ அல்லது இணையதளத்திலோ புகாா் அளிக்கலாம்.
இக்கூட்டத்தில் இணையவழிக் குற்றப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாரதிதாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு இணைய வழியில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சிறாா் குற்றங்களைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை: எஸ்.பி. வி. பிரசன்னகுமாா்

ஆணவக் குற்றங்களுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் - எவிடென்ஸ் அமைப்பு






