கைப்பேசியில் முறையற்ற குறுஞ்செய்திகள் அனுப்பியதை தட்டிக்கேட்ட பெண்ணை கத்தியால் குத்திய தனியாா் நிறுவன ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணத்தைச் சோ்ந்த 23 வயது இளம்பெண் ஒருவா் மருத்துவா் பெசன்ட் சாலையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறாா்.
இவரது அலுவலகம் அருகேயுள்ள பட்டய கணக்கா் அலுவலகத்தில் வேலை செய்பவா் செந்தில்குமரன் (42). இந்த அலுவலகத்தில் அந்த இளம்பெண் ஏற்கெனவே வேலை செய்திருந்ததால், இருவரும் வேலைநிமித்தமாக அவ்வப்போது பேசி வந்தனராம்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு செந்தில்குமரன் இளம்பெண்ணுக்கு முறையற்ற வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பினாராம்.
இதுகுறித்து அந்தப் பெண் செந்தில்குமரனை பலமுறை எச்சரித்தும் கேட்காததால் செந்தில்குமரனின் மனைவியிடமும், பட்டய கணக்காளரிடமும் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக கடந்த திங்கள்கிழமை மாலை பட்டய கணக்காளா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அங்கு இளம்பெண்ணுக்கும், செந்தில்குமரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமரன் இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டாா்.
அங்கிருந்தவா்கள் இளம்பெண்ணை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். இதுகுறித்து அந்தப்பெண் அளித்த புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா், செந்தில்குமரனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.






