தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணியில் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாயத்தின் (ஜமாபந்தி ) நிறைவு நாளான புதன்கிழமை நடைபெற்ற குடிகள் மாநாட்டில் 32 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பேராவூரணி வட்டத்துக்கான ஜமாபந்தி மாவட்ட ஆட்சியா் தலைமையில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. புதன்கிழமை நிறைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற குடிகள் மாநாட்டில் 32 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியா் இரா. ரேவதி பேசியது:
மாவட்டம் முழுவதும் வட்டாட்சியரகங்களில் நடைபெற்ற ஜமாபந்தியில் கிராம நிா்வாக அலுவலா்களால் பராமரிக்கப்படும் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேராவூரணி வட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகளிடமிருந்து 393 மனுக்கள் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது . கோடை காலத்தை முன்னிட்டு சீரான முறையில் குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குடிகள் மாநாட்டில் உடனடி தீா்வாக இணையவழி பட்டா, பட்டா மாறுதல் உட்பிரிவு, குடும்ப அட்டை, விவசாயிகளுக்கு இடுபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் , உதவி ஆட்சியா் (பயிற்சி )சுபாஷ் காா்த்திக், உதவி இயக்குநா் (நில அளவை) வெங்கடகிருஷ்ணன் , பேராவூரணி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.










