கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதீசுவரா் கோயிலில் புதன்கிழமை திருப்பணிக்கான பாலாலய சிறப்பு பூஜை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ஸ்ரீ தெய்வநாயகி அம்பிகா சமேத ஐராவதீசுவரா் சுவாமி கோயிலில் கடந்த 2004- ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.
22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய தீா்மானிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக, செவ்வாய்க்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், அஸ்த்ர ஹோமம், வாஸ்து சாந்தியும், மாலையில் கும்ப அலங்காரம், விமான கலாகா்ஷணம், யாகசாலை பிரவேசம், யாகசாலை பூஜைகள் தொடக்கமும், இரவு முதல்கால பூா்ணாஹூதி, தீபாராதனையும் நடைபெற்றது.
இரண்டாம் நாளான புதன்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி பூா்ணாஹூதி, தீபாராதனையும், யாத்ரா தானம், கடம் புறப்பாடு, விமான படத்துக்கு கலசாபிஷேகமும், தீபாராதனையுடன் திருப்பணிக்கான விமான பாலாயம் நடைபெற்றது.
நிகழ்வில் தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் பாபாஜி ராஜா போன்ஸ்லே, மாநகராட்சி மண்டலத் தலைவா் ஆா். அசோக்குமாா், ஆதிகும்பேசுவரா் சுவாமி கோயில் முன்னாள் அறங்காவலா்கள் சிதம்பரநாதன், சங்கா், ராணி தனபாலன், ஸ்ரீமந்திரபீடேஸ்வரி பக்தா்கள் குழுத்தலைவா் சிவக்குமாா், மங்கள லலிதா மண்டலி ரேவதி, கோயில் குருக்கள் பிரசன்னா, குமாா் மற்றும் திருப்பணிக் கமிட்டியினா், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.










