மலேசியாவிலிருந்து பயணி ஒருவரால் முடியை சீராக்கும் கருவிகளுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் திருச்சி விமான நிலையத்தில் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து புதன்கிழமை காலை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக, சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள், விமானப் பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த பெண் பயணி மீரா என்பவர், தலைமுடியை சீராக்கும் (ஹேர் ஸ்ட்ரைக்ட்)கருவிகளுக்குள் 230 கிராம் தங்கக் கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ. 7 லட்சமாகும்.