காலதாமதமில்லாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சியில் காவிரி நதிநீர் மீட்புக் குழு சார்பில் ஞாயிற்றுக்கிழமை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிட காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். தமிழக அரசும் மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தர வேண்டும், நீரின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி நதிநீர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி சிறைகளில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி காவிரி நதிநீர் மீட்புக் குழு சார்பில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
திருச்சி ஜங்சன் அருகே பாரதியார் சாலையில் தொடங்கிய மனிதச்சங்கிலி போராட்டம் ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலகம், ஜென்னி பிளாசா, தலைமை அஞ்சல் நிலையச் சாலை, ஜோசப் கண் மருத்துவமனை, மேலப்புதூர், சுரங்கப்பாதை பாலம், வேர்ஹவுஸ், பாலக்கரை, பிரபாத் ரவுண்டானா, காயிதே மில்லத் சாலை வழியாக காந்தி மார்க்கெட் பகுதியில் நிறைவடைந்தது.
இந்த போராட்டத்தில் ஆயர் அந்தோனி டிவோட்டா, சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, குருகுல முதல்வர் யூஜின் அடிகளார், குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் சகாயராஜ், ஜோ.ஜோ.லாரன்ஸ், குருத்துவச் செயலர் சுரேஷ்குமார், சிஎஸ்ஐ பொருளாளர் எஸ்.எஸ். இமானுவேல், கரூர் சி.எஸ்.ஐ. தலைவர் பாபு அலெக்சாண்டர் கிறிஸ்டோபர், காங்கிரஸ் கட்சியின் ரெக்ஸ், தமுமுகவின் ஜாபர் அலி, ராஜா, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் பாபு, ஜமா அத்துல் உலமாவின் மாவட்டப் பொருளாளர் அப்துல் மன்னான் உள்ளிட்டோர் மனிதச்சங்கிலி போராட்டத்தில் பங்கேற்று கைகோர்த்து நின்று, முழக்கங்களை எழுப்பினர். பேரவைத் தலைவர் வேளாங்கண்ணி, பொருளாளர் பெர்ஜித்ராஜன் உள்ளிட்டோர் போராட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.