மணப்பாறையில் தண்ணீரில்லா கிணற்றில் 15 நாள்கள் தவித்த நல்லபாம்பு, நாய்க்குட்டி மீட்பு உயிருடன் மீட்கப்பட்டன.
மணப்பாறை அடுத்த கஸ்பாபொய்கைப்பட்டியில் உள்ள முத்தையாகவுண்டர் விவசாய தண்ணீரில்லா 40 அடி ஆழ கிணற்றில் 4 அடி நீள நல்லபாம்பு ஒன்றும், நாய்க்குட்டி மற்றும் கோழிக்குஞ்சு ஒன்றும் தவறி விழுந்துள்ளது. படிகட்டுகள் இல்லாததால் யாரும் நாய்க் குட்டியையும், கோழியையும் காப்பாற்ற முடியவில்லை. மேலும் நல்லபாம்பு இருப்பதால் கிணற்றில் இறங்க யாரும் முன்வரவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து மணப்பாறை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான வீரர்கள், கிணற்றில் கயிறு கட்டி இறங்கி முதலில் துறை கருவி மூலம் நல்லபாம்பினை பிடித்து மேலே கொண்டு வந்தனர். பாம்பிற்கு பயந்து கிணற்றின் சுவரில் இருந்து ஒரு பொந்தில் ஓடி ஒளிந்துகொண்ட நாய்க்குட்டியை கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர்.
கோழிக்குஞ்சு காணவில்லை. கடந்த 15 நாள்களாக கிணற்றில் தவித்த நாய்க்குட்டி, நல்லபாம்பு மீட்டெடுக்கப்பட்டது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.