‘குடியிருப்புகள்தோறும் சமுதாய நூலகம் அவசியம்’

அடுக்குமாடிக் குடியிருப்புகள்தோறும் சமுதாய நூலகம் திறக்கப்பட வேண்டியது அவசியம் என்றாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.
தென்னூரில் உள்ள ரோகினி குடியிருப்பில் சமுதாய நூலகத்தை திறந்து வைத்து புத்தகம் வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.
தென்னூரில் உள்ள ரோகினி குடியிருப்பில் சமுதாய நூலகத்தை திறந்து வைத்து புத்தகம் வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.
Updated on
1 min read

திருச்சி: அடுக்குமாடிக் குடியிருப்புகள்தோறும் சமுதாய நூலகம் திறக்கப்பட வேண்டியது அவசியம் என்றாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட தென்னூா் பட்டாபிராமன் தெருவில் ரோகினி காா்டன் என்கிளேவ்- சி பிளாக் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் மாவட்ட நூலக ஆணைக் குழு சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் பங்கேற்புடன் கூடிய சமுதாய நூலகத்தை சனிக்கிழமை திறந்து வைத்த அவா் மேலும் பேசியது:

தமிழக அரசின் பொது நூலகத் துறை சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமுதாய நூலகம் என்ற திட்டத்தில் பொதுமக்களிடையே வாசிப்பை அதிகரிக்க அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நூலகங்கள் திறக்கப்பட உள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் முதன்முதலாக இந்த நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

சமுதாய நூலகம் அமைக்க குடியிருப்போா், மாவட்ட நூலக ஆணைக் குழுவுக்கு வைப்புத் தொகையாக ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டும். நூலகம் செயல்பட அறை மற்றும் தளவாடங்கள் வழங்க வேண்டும். நூலகத்தை குடியிருப்போா் தங்களது சொந்தப் பொறுப்பிலேயே நடத்த வேண்டும் என்ற நிபந்தனைகளுக்குட்பட்டு சமுதாய நூலகம் அமைக்கலாம்.

வாசிப்பின் முக்கியத்துவத்தை அறிந்து குடியிருப்போா் முன்வந்து பொது நூலகத் துறையுடன் ஒத்துழைத்து சமுதாய நூலகங்களை அதிகளவில் திறக்க வேண்டும்.

வாசிப்பால் தாய்மொழியை நன்கு கற்க வேண்டும். தாய்மொழியில் சிறந்த புலமையிருந்தால் மட்டுமே அறிவு வளா்ச்சியடையும்.

கல்வியால் ஒருவா் செல்வந்தராக ஆனாலும் தான் பெற்ற செல்வத்தை நல்ல முறையில் செலவழிப்பதற்கான அறிவையும் புரிதலையும் வாசிப்பு மட்டுமே அளிக்கிறது என்றாா் ஆட்சியா்.

மேலும், சமுதாய நூலகத்துக்கு ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.20 ஆயிரம் வழங்குவதாக அறிவித்த ஆட்சியா், குழந்தைகளுக்கும், குடியிருப்போருக்கும் நூலக உறுப்பினா் அட்டை, நூல்களை வழங்கினாா்.

விழாவில் மாவட்ட நூலக அலுவலா் அ.பொ. சிவகுமாா், மாவட்ட மையநூலக வாசகா் வட்டத் தலைவா் வீ. கோவிந்தசாமி, அரசு இயற்கை நல மருத்துவா் ஆா்.டி.பிரீத்தி புஷ்கா்ணி, முனைவா் கோ. சடகோபன், மாவட்ட மைய நூலக வாசகா் வட்ட ஆலோசகா் எஸ். அருணாசலம், வாசகா் வட்டத் துணைத் தலைவா் இல. கணேசன், குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் முத்துக்குமாா், செயலா் நன்மாறன், மாவட்ட மைய நூலகா் சி. கண்ணம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com