திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ. பழனிகுமார் இன்று (அக்.27) ஆலோசனை நடத்தினார்.
திருச்சி கலையரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசுகையில், உச்சநீதிமன்றம் விதித்துள்ள காலக்கெடுவிற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.
நான்கு மாத கால அவகாசம் மட்டுமே உள்ளதால், தேர்தல் பணியில் அங்கம் வகிக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மாநகராட்சிகள் நகராட்சிகள் பேரூராட்சிகளுக்கான தேர்தல் என்பதால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் முழுமையாக பயன்படுத்தப்பட உள்ளது.
எனவே, வாக்குப்பதிவு இயந்திரங்களையும் வாக்குச்சாவடி களையும் தயார்படுத்த வேண்டியது அவசியமாகும். பெல் நிறுவனத்தில் இருந்து வந்துள்ள தொழில்நுட்ப பணியாளர் 55 பேர் மூலம் திருச்சி, மதுரை, கோவை சென்னை, திருநெல்வேலி ஆகிய 5 இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களில் இந்த பணி விரைவுபடுத்தப்படும். தேர்தல் நேர்மையாகவும் சுமுகமாகவும் விரைந்து நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேர்தல் பணி என்பது பகுதி நீதி பணி என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்றார் ஆணையர்.
இக்கூட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், மாநகரக் காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பயிற்சி கையேட்டை மாநில தேர்தல் ஆணையர் வெளியிட திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.