திருச்சி: தமிழகத்தில் காமராஜர் ஆட்சி காலம் தான் பொற்காலமாக இருந்தது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
மேலும் அந்த ஆட்சியை எந்த ஆட்சியுடன் ஒப்பிட முடியாது எனவும் குறிப்பிட்டார். திருச்சியில் இன்று நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவர், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய பிறகு செய்தியாளர்களிரிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி செய்த ஒன்பதாண்டு காலம் தான் பொற்காலமாக இருந்தது. கல்வி, விவசாயத்தில் புரட்சி செய்து பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி, பாசனத்துக்கு பல அணைகளை கட்டி தந்தவர் காமராஜர். அவரது ஆட்சியை வேறு எந்த ஆட்சியுடன் ஒப்பிட முடியாது.
இதையும் படிக்க: நடிகர் விஜய் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
இன்றைய அரசியல்வாதிகள் அவரை உதாரணமாக கொண்டு செயல்பட வேண்டும். தமிழகத்தில் தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். ஜிஎஸ்டி ஏற்றம்-குறைவு என்பது நிலையானது அல்ல. ஜிஎஸ்டி கவுன்சில் அவ்வப்போது கூடி மக்களின் கருத்துக்களை கேட்டு அதற்கு ஏற்ப மாற்றத்தை செயல்படுத்தி வருகிறது.
ஜிஎஸ்டி விவகாரத்தில் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க மத்திய அரசு எப்போதும் தயாராகவே உள்ளது. டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலை தமிழக அரசு அதிகப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை சங்கங்கள் மூலம் தட்டுப்பாடு இன்றி உரங்களை வழங்க வேண்டும். உரங்கள் கொள்முதலை தமிழக அரசு அதிகப்படுத்த வேண்டும். அதிமுகவில் நடக்கும் உள்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டியது இல்லை என்றார் ஜி கே வாசன்.