திருச்சி: இப்போதெல்லாம் ஏதேனும் அரசு விழா என்றால் நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்த இடத்திலேயே அமைச்சர்கள் ஒரு மினி பேட்டியளிப்பதென்பது வழக்கமாகிவிட்டது.
சிலர் பேட்டியளிக்காமல் செல்ல மாட்டார்கள். ஆனாலும், சில அமைச்சர்கள் இவற்றைத் தவிர்த்துவிடுவார்கள்.
அமைச்சர் கே.என். நேருவைப் பொருத்தவரை வெள்ளந்தியாக எதையாவது பேச, சில நேரங்களில் 'எக்குத்தப்பாக' அதுவே வைரலாகித் தேவையில்லா தொல்லையைக் கொண்டுவந்துவிடுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், திருச்சியில் வயலூர் சாலை உய்யகொண்டான் வாய்க்கால் பாலம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு (222 பேருக்கு) இலவச வீட்டுமனைப் பட்டாக்களை திங்கள்கிழமை வழங்கினார் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு பத்திரிகையாளர்கள் அமைச்சர் நேருவிடம் பேட்டி காண, ஒலிபெருக்கிகளை ஏந்தியபடி நெருங்க முயன்ற போது, அவர் தனக்கே உரிய பாணியில் ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.
இதைத் தொடர்ந்து, பார்த்துக்கொண்டிருந்த தொண்டர்கள், செய்தியாளர்கள் மத்தியில் பெரும் சிரிப்பலை எழுந்தது.