உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சதசண்டி வேள்வி.
உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சதசண்டி வேள்வி.

வெக்காளியம்மன் கோயிலில் 50ஆவது ஆண்டு சதசண்டி பெருவேள்வி

Published on

உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் 50ஆவது ஆண்டு சதசண்டி பெருவேள்வி புதன்கிழமை தொடங்கியது.

ஊரெனப்படுவது உறையூரே என்ற வரலாற்றுப் பெருமை மிக்க உறையூரில் உள்ள வெக்காளியம்மன் கோயில் சக்தி தலங்களில் பிரசித்தி பெற்றது. கல்விக்கு சரஸ்வதி, செல்வத்துக்கு லட்சுமி, வலிமைக்கு துா்க்கை என மூன்று அம்மன்களை தனித்தனியே வழிபட வேண்டும். ஆனால் அந்த மூன்றையும் வழங்கும் தெய்வமாக வெக்காளியம்மன் உள்ளாா்.

இந்நிலையில் உலகில் அமைதி நிலைக்கவும், செல்வம் பெருகவும், குடும்பங்களில் மகிழ்ச்சி பொங்கவும், நல்ல மழை பெய்யவும் 50ஆவது ஆண்டாகத் தொடங்கியுள்ள சதசண்டி பெருவேள்வி வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி செவ்வாய்க்கிழமை வெக்காளி அம்மனிடம் அனுமதி பெறும் நிகழ்வு, புதன்கிழமை காலை 7 மணிக்கு நாவரண வழிபாடு, நண்பகல் 12 மணிவரை முதல் கால சண்டி வேள்வி, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை இரண்டாம் கால வேள்வியும் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் அம்மனை வழிபட்டு வேள்வியில் கலந்து கொண்டனா்.

வியாழக்கிழமை மூன்றாம், நான்காம் கால வேள்வி, ஆக.30ஆம் தேதி காலை ஐந்தாம் கால வேள்வி, சுமங்கலி வழிபாடு, கன்னியா் வழிபாடு, காளையா் வழிபாட்டுடன் விழா நிறைவுறும். இதன் தொடா்ச்சியாக பெருவேள்வி நிறைவு தீப வழிபாடு நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, மாலை 7 மணிக்கு பெருந்தீப ஒளி வழிபாடு அம்பாள் திருவீதி உலா நடைபெறும். வேள்வியை திருவானைக்கா சிவாகம சிரோமணி எஸ். சந்திரசேகர சிவாச்சாரியாா் நடத்துகிறாா். ஏற்பாடுகளை திருக்கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com