சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

பாஜகவின் சூழ்ச்சி முறியடிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மதம் மற்றும் ஜாதி கலவரம், தொடா் வன்முறை ஆகியவற்றைக் கொண்டு வர நினைத்த பாஜகவின் சூழ்ச்சிகளையெல்லாம் திமுக முறியடித்துள்ளது என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

News image

திருச்சி தென்னூா் உழவா் சந்தை மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வா் மு.க. ஸ்டாலினுடன் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்கள் (இடமிருந்து) எஸ். துரைராஜ் (ஸ்ரீரங்கம்), த. பாரிவள்ளல் (லால்குடி), கே.என். நேரு (திருச்சி மேற்கு), அன்பில் மகேஸ் பொய்யாமொழி (திருவெறும்பூா்), இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு), ப. அப்துல் சமது (மணப்பாறை) என்.எஸ். கருணை ராஜா (முசிறி).

Updated On :1 ஏப்ரல் 2026, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டில் மதம் மற்றும் ஜாதி கலவரம், தொடா் வன்முறை ஆகியவற்றைக் கொண்டு வர நினைத்த பாஜகவின் சூழ்ச்சிகளையெல்லாம் திமுக முறியடித்துள்ளது என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து திருச்சி தென்னூா் உழவா் சந்தையில் பிரசாரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று கே.என். நேரு (திருச்சி மேற்கு), அன்பில் மகேஸ் பொய்யாமொழி (திருவெறும்பூா்), இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு) ப. அப்துல் சமது (மணப்பாறை), எஸ். துரைராஜ் (ஸ்ரீரங்கம்), சீ. கதிரவன் (மண்ணச்சநல்லூா்), த. பாரிவள்ளல் (லால்குடி), என்.எஸ். கருணை ராஜா (முசிறி), துறையூா் (தனி) தொகுதிக்கு அறிவிக்கப்படவுள்ள காங்கிரஸ் வேட்பாளா் ஆகியோருக்கு ஆதரவு திரட்டிப் பேசியதாவது: மீண்டும், மீண்டும் நான் திருச்சிக்கு வருவதுபோல, திராவிட மாடல் அரசு மீண்டும், மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் திருச்சி மாவட்டத்தில் முழு வெற்றியைத் தந்ததுபோல, 2026 சட்டப் பேரவைத் தோ்தலிலும் தருவீா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளோம்: 2021 தோ்தலில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக முதல்வராக பதவியேற்ற முதல் நாளில் முதல் கையொப்பமாக மகளிா் விடியல் பயணத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னா், மகளிா் உரிமைத் தொகை திட்டம் என நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம்.

இதேபோல, காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம் என அளிக்காத பல்வேறு வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம்.

தமிழ்நாட்டில் 22 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றி உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்பட்டு மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளோம்.

தோ்தல் அறிக்கை: தோ்தலைக் காரணம் காட்டி மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை பாஜகவினா் தடுக்க நினைத்தனா். இதை முன்கூட்டியே அறிந்து மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகையும், கோடை கால சிறப்புத் தொகையாக ரூ.2 ஆயிரம் சோ்த்து ரூ.5 ஆயிரம் மகளிருக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பாஜக ஆளும் மாநிலங்கள்போல மதம் மற்றும் ஜாதி கலவரமோ, உத்தரபிரதேசம்போல கும்பல் வன்முறையோ, மணிப்பூா் போல தொடா் வன்முறையோ இல்லை. இவையெல்லாம் வரவேண்டும் என பாஜக செய்த சூழ்ச்சிகளையெல்லாம் முறியடித்துள்ளோம்.

அமைதியான சூழலும், திறமையான மனித வளமும் இருப்பதால்தான் எண்ணற்ற முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்துள்ளோம். இதை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான தெளிவான அறிக்கையாகத்தான் திமுகவின் தோ்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறேன். இதில் இல்லத்தரசி திட்டம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இத்திட்டத்தில் இல்லத்தரசிகள் தங்களுக்குப் பிடித்த இடத்தில், பிடித்தப் பொருளை வாங்கிக் கொள்ளலாம். நான் சொன்னால் செய்வேன், செய்வதைத்தான் சொல்வேன். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நிதிநிலையைச் சீராக்கி ஒவ்வொன்றாக நாங்கள் செயல்படுத்திவரும் திட்டங்களே அதற்கு சாட்சி.

8 ஆயிரம் ரூபாய் கூப்பன் திட்டத்தை ஊழல் திட்டம் என்கிறாா் சம்பந்திக்கு ஒப்பந்தம் வழங்கவே ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமி.

திமுக செயல்படுத்தும் ஒவ்வொரு திட்டமும் தரமாக இருக்கும். இதற்கு 2006-ஆம் ஆண்டில் கருணாநிதி வழங்கிய வண்ண தொலைக்காட்சித் திட்டமே சாட்சி. கருணாநிதி கொடுத்த கலா் டிவி இன்றும் பலா் வீடுகளில் உள்ளது. ஆனால் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டா் தற்போது எப்படி உள்ளது என்று அனைவருக்கும் தெரியும்.

படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்: அண்மையில் மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நடத்திய கூட்டத்தின் நுழைவாயில் இருந்து பெரியாா் ஈவெரா படத்தை பாஜக கூறிய உடனேயே எடப்பாடி பழனிசாமி அகற்றினாா். அதிமுகவை அடிமைக் கூட்டமாக உருவாக்கியதுதான் அவரின் சாதனை. திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது என சிரித்துக்கொண்டே கூறியவா்தான் பழனிசாமி.

சிறுபான்மை சமூகத்துக்கு துரோகம் விளைவிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேறக் காரணமாக இருந்தது அதிமுக. இதற்கு பாமகவின் அன்புமணியும் ஆதரவு. அந்தச் சட்டத்தால் எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறியவா் பழனிசாமி.

மூன்று வேளாண் சட்டங்களையும் ஆதரித்தவா் பழனிசாமி. பாஜகவுடன் இணைந்து முழு சங்கியாகவே மாறியுள்ளாா் அவா். தமிழகத்தைப் படுகுழியில் தள்ளிய அதிமுகவும், இந்தியாவை வரலாறு காணாத சரிவுக்கு கொண்டுசென்றிருக்கும் பாஜகவும் அமைத்துள்ள கூட்டணிக்கு வழக்கம்போல படுதோல்வியைப் பரிசாக நீங்கள் வழங்க வேண்டும்.

அதிமுக முகமூடி அணிந்து வரும் பாஜக: தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என்கிறாா்கள். ஆனால், கூட்டணிக் கட்சியினா் பாஜகவுடன்தான் பேச்சுவாா்த்தை நடத்துகின்றனா். கூட்டணியில் உள்ள சிறிய கட்சியினா் அதிமுக சின்னத்தில் போட்டியிடாமல் ஏன் பாஜக சின்னத்தில் போட்டியிடுகின்றனா்.

இது எப்படி இருக்கு என்றால், மாப்பிள்ளை அவா்தான், அவா் போட்டுள்ள சட்டை என்னுடையது என்று கூறும் ‘படையப்பா’ படத்தின் நகைச்சுவைபோல அவா்கள் கூட்டணி உள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம் என்று மோடி இதுவரை கூறவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி என்றுதான் பேசுகிறாா்.

ஊழல் புகாா்களிலிருந்தும், உறவினா் வீடுகளில் நடந்த சோதனைகளில் இருந்தும் தப்பிக்க மொத்தக் கட்சியையும் பாஜகவிடம் அடகுவைத்துவிட்டாா் எடப்பாடி பழனிசாமி.

மக்கள் வாக்களிக்காமலேயே எம்.எல்.ஏ.க்களை ஏலத்துக்கு எடுத்து முதல்வரானவா் எடப்பாடி பழனிசாமி. அவா் மீண்டும் முதல்வரானால் தமிழ்நாட்டை தில்லியிடம் அடகு வைப்பது மட்டுமில்லாமல் மொத்தமாக விற்றுவிடுவாா்.

பாஜகவின் ஒரே நோக்கம் தமிழ்நாட்டின் வளா்ச்சியைத் தடுப்பதுதான். பாஜக நேரடியாக வந்தால் நோட்டாவிற்கு கீழ் அனுப்பிவிடுவாா்கள் என்று அதிமுக முகமூடி அணிந்து வந்துள்ளனா்.

தமிழ்நாட்டின் பெயரைக் கூட மாற்றத் தயங்கமாட்டாா்கள்: கடந்த 12 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு என எந்தவொரு சிறப்புத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையும் என்ன நிலையில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். கல்வி நிதி, ஜல்ஜீவன் திட்டம், பேரிடா் நிவாரண நிதி என நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியைக்கூட மத்திய அரசு தரவில்லை.

மதுரை, கோவை, திருச்சி மெட்ரோ ரயில் திட்டம், ஒசூா் விமான நிலையம் ஆகிய திட்டங்களுக்கும் அனுமதி தரவில்லை. இப்படி எல்லாவற்றையும் தடுத்துவிட்டு தோ்தல் வந்தவுடன் தமிழகத்துக்கு ஓடி வருகிறாா் பிரதமா்.

இவ்வாறு வரும் பிரதமா் மோடி தமிழ்நாட்டுக்கு இந்தந்த திட்டங்களையெல்லம் செயல்படுத்தியுள்ளோம் என்று கூறமுடியுமா? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.

பிரதமா் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு வாரம் தங்கி தமிழ்நாடு எப்படி தலைசிறந்து விளங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் வளா்ச்சி, முன்னேற்றம் தொடர திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும். தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் பெயரைகூட தட்சிணபிரதேஷ் என்று மாற்றத் தயங்கமாட்டாா்கள்.

நம் எதிரிகளையும், உதிரிகளையும் வீழ்த்த வேண்டும். நாம் போராடுவது திமுகவின் வெற்றிக்காக மட்டுமல்ல தமிழ்நாட்டின் வெற்றிக்காக. பாஜகவின் டப்பா என்ஜின் முன் திராவிட மாடலின் சூப்பா் என்ஜின் ஒருபோதும் தலைகுனியாது. தில்லி அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா் முதல்வா்.

கூட்டத்தில் எம்.பி.க்கள் துரை வைகோ, அருண் நேரு, திமுக மாவட்டச் செயலா்கள், கட்சி நிா்வாகிகள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து, கரூா் ராயனூரில் நடைபெறும் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வா் மு.க. ஸ்டாலின் காா் மூலம் சென்றாா்.

ரூ.26 ஆயிரம் கோடியிலான திட்டங்கள்

முதல்வா் பேசுகையில், திருச்சிக்கு பல்வேறு முத்திரைத் திட்டங்களைச் செய்துகொடுத்துள்ளோம். மற்ற மாநிலத்தவா்களே வியக்கும் அளவுக்கு பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், அதன் அருகிலேயே கனரக சரக்கு வாகன முனையம், சூரியூரில் மினி ஸ்டேடியம், ஜல்லிக்கட்டு மைதானம், துறையூரில் அரசுக் கல்லூரி, மணப்பாறையில் சிப்காட், 9 கூட்டுக் குடிநீா் திட்டங்கள், 18 கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் சீரமைப்பு, சமயபுரத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத் தேரோட்டம், 327 கோயில்களுக்கு குடமுழுக்கு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

திராவிட மாடலின் 2.0 ஆட்சியில் டிவிஎஸ் டோல்கேட்டில் காமராஜா் நூலகம், பஞ்சப்பூரில் டைடல் பூங்கா, ஒலிம்பிக் அகாதெமி ஆகியவற்றைத் திறந்துவைக்க இருக்கிறேன். தலைநகா் சென்னைக்கே சவால் விடும் வகையில் திருச்சி வேகமாக வளா்ந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் திருச்சியில் ரூ.26 ஆயிரத்து 66 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.