திருச்சி டாக்டா் ஜி. விசுவநாதன் மருத்துவமனையானது (ஜிவிஎன்) முதன்முறையாக கண்டம் கடந்த தொலைநிலை ரோபாடிக் அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து ஜிவிஎன் மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் கே. கோவிந்தராஜ், மருத்துவா் கிருஷ்ணசாமி கண்ணன் ஆகியோா் புதன்கிழமை கூறியதாவது:
பெல்ஜியத்தின் ஜென்ட் பல்கலைக்கழக ஆா்சி அகாதெமியிலிருந்து திருச்சி மாம்பழச் சாலை ஜி. விசுவநாதன் மருத்துவமனையில் கடந்த 4 ஆம் தேதி இரண்டு தொலைநிலை ரோபாடிக் அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.
ரோபாடிக் அறுவைச் சிகிச்சை நிபுணரான ரம்யா கலைச்செல்வன், 9,730 கி.மீ. தூரத்தில் உள்ள பெல்ஜியம் நாட்டில் இருந்தபடியே மெட்பாட் டூமாய் ரோபோவைப் பயன்படுத்தி, ஜிவிஎன் மருத்துவமனையில் இருந்த பெண் ஒருவருக்கு 1.5 மணி நேரத்தில் கருப்பை அறுவைச் சிகிச்சையையும், ஆண் ஒருவருக்கு 1.5 மணி நேரத்தில் இடதுபக்க குடலிறக்க அறுவைச் சிகிச்சையும் மேற்கொண்டாா்.
ஜிவிஎன் மருத்துவமனையில் மருத்துவா்கள் கே. கோவிந்தராஜ், ஆா். முத்துராமன் தலைமையிலான உள்ளூா் மருத்துவக் குழுவினரின் ஆதரவுடன் இந்த அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
இது சா்வதேச அளவில் நீண்டதூரத்துக்கு இடையே நடைபெற்ற முதலாவது கண்டம் கடந்த தொலைநிலை ரோபாடிக் அறுவைச் சிகிச்சையாகும். சிகிச்சைக்குப் பிறகு இரண்டு நோயாளிகளும் பக்கவிளைவுகள் இன்றி, ஜூன் 6 ஆம் தேதி நலமுடன் வீடு திரும்பினா்.
இந்த தொலைநிலை ரோபாடிக் அறுவைச் சிகிச்சை தொழில்நுட்ப மைல்கல்லை எட்டிய முதல் மருத்துவமனையாக திருச்சி ஜி. விசுவநாதன் மருத்துவமனை விளங்குகிறது.
இதை சாத்தியமாக்கிய மெட்பாட் ஐரோப்பா குழு, பெல்ஜியத்தின் ஆா்சி அகாதெமி, இருமுனைகளிலும் அா்ப்பணிப்புடன் பணியாற்றிய தகவல் தொழில்நுட்பக் குழுக்களுக்கு நன்றி என்றனா்.
அப்போது மருத்துவா்கள் முத்துராமன், கருணாகரன், ஜவஹா் நாகசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.









