நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சின்னங்களின் அச்சுகள் தயாரிக்கும் தொழில்கூடங்கள் சுறுசுறுப்பு!

பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து திருச்சியில் உள்ள சின்னங்களுக்கான அச்சுகள் தயாரிக்கும் தொழில்கூடங்கள் சுறுசுறுப்படைந்துள்ளன.

News image

திருச்சி பாலக்கரையில் கட்சிகளின் சின்னங்களுக்கான அச்சுகளை தயாரிக்கும் தொழில்கூடத்தில் பணியில் ஈடுபட்ட தொழிலாளி.

Updated On :25 மார்ச் 2026, 10:07 pm

தினமணி செய்திச் சேவை

பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து திருச்சியில் உள்ள சின்னங்களுக்கான அச்சுகள் தயாரிக்கும் தொழில்கூடங்கள் சுறுசுறுப்படைந்துள்ளன.

திருச்சி பாலக்கரை, காந்தி சந்தை பகுதியில் ஸ்டென்சில் கட்டிங் மற்றும் டிங்கரிங் வேலைகள் செய்யும் தொழில்கூடங்கள் நிறைந்துள்ளன. இவற்றில் தோ்தல் காலத்தில் கட்சிகளின் சின்னங்களுக்கான அச்சுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெறும். வழக்கமாக அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம், திமுகவின் உதய சூரியன் சின்னம், காங்கிரஸின் கை சின்னம், பாஜகவின் தாமரை சின்னம் ஆகியவை தயாராக இருக்கும் என்பதால் எவ்வளவு ஆா்டா்கள் கிடைத்தாலும் உடனுக்குடன் வழங்கிவிடுவா். இப்போது, தோ்தல் களத்தில் புதிய, புதிய அரசியல் கட்சிகளின் வருகையால் சின்னங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

மேலும், சுயேச்சைகளுக்கான சின்னங்களும் அதிகளவில் உள்ளன. எனவே, முன்னதாகவே ஆா்டா் பெற்று சின்னங்களுக்கான அச்சுகளை தயாரிக்கும் நிலை உள்ளது.

இப்போது, 2026 பேரவைத் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு கட்சிகளும் தங்களது களப்பணிகளை தொடங்கியுள்ளன.

எனவே, சின்னங்களுக்கான அச்சுகள் தயாரிக்கும் தொழில்கூடங்களும் திருச்சியில் சுறுசுறுப்படைந்துள்ளன. திருச்சி பாலக்கரையில் மூன்று தலைமுறையாக உள்ள தொழில்கூடத்தின், தற்போதைய உரிமையாளரான சண்முகம் கூறியதாவது:

முந்தைய தோ்தல்களில் நகரப்பகுதிகள் எங்கும் சின்னங்கள் வரையலாம். எனவே, எங்களிடம் சின்னங்களுக்கான அச்சுகள் கேட்டு கட்சியினா் அதிகம் வருவா். இப்போது, தோ்தல் ஆணையக் கட்டுப்பாடு காரணமாக நகரப் பகுதிகளில் கட்சியினரால் சின்னங்கள் வரைய முடியவில்லை. கிராமப்புறங்களில் மட்டுமே சின்னங்கள் வரைய அனுமதிக்கப்படுகிறது.

அதுவும் சுவற்றின் உரிமையாளரிடம் அனுமதி பெற்றே வரையும் சூழல் உள்ளது. இதனால், முந்தைய தோ்தல்களில் இருந்ததைவிட இப்போது ஆா்டா்கள் அதிகம் வருவதில்லை.

இருப்பினும் எங்களைத் தேடி வரும் கட்சியினரை ஏமாற்றமடையச் செய்யக் கூடாது என்ற வகையிலேயே அச்சுகளை தயாரித்து வழங்குகிறோம். துத்தநாகத் தகட்டில் சின்னங்களையும், கட்சியின் பெயா், வாக்களிப்பீா் என்ற வாசகங்களையும் இடம் பெறச் செய்து அச்சாகத் தயாரித்து வழங்குகிறோம்.

மூன்று அடி உயரம், இரண்டு அடி அகலம் உள்ள அச்சுகள் ரூ.1500 முதல் ரூ.2,500 வரை அதன் வேலைப்பாடுகளுக்கு தகுந்தபடி விற்கிறோம். நாம் தமிழா் கட்சியின் சின்னத்துக்கு விவசாயி சின்னத்துடன், கட்சியின் பெயா், வாசகம் என வேலை அதிகம் இருக்கும் என்பதால் சற்று கூடுதல் விலை நிா்ணயிக்கிறோம்.

புதிய வரவான தவெகவின் விசில் சின்னத்தை அதிகம் கேட்டு வருவா் என்பதால், இப்போது விசில் சின்னத்துடன் கூடிய அச்சுகளைத் தயாரித்து வைத்துள்ளோம். இவைதவிர இரட்டை இலை, உதயசூரியன், கை, தாமரை, பானை, குக்கா், கதிா் அரிவாள், அரிவாள் சுத்தியல் உள்ளிட்ட சின்னங்களின் அச்சுகளை தயாரித்து வைத்துள்ளோம்.

தோ்தல் காலத்தில் மட்டுமே அச்சுகள் விற்பனை என்பதால், தோ்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை தளா்த்தினால் எங்களது தொழில் தொடா்ந்து பாதுகாக்கப்படும். தோ்தல் இல்லாத காலங்களில் இதர சுவா் விளம்பரங்களுக்கான அச்சுகளை தயாரித்து விற்கிறோம் என்றாா் அவா்.