
சவூதியில் தமிழக மீனவா்கள் 2 போ் சுட்டுக் கொலை திருச்சி வந்த உடல்கள் உறவினா்களிடம் ஒப்படைப்பு
சவூதி அரேபியாவில் கடற்கொள்ளையா்களால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவா்கள் 2 பேரின் உடல்கள் வியாழக்கிழமை திருச்சிக்கு கொண்டுவரப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சவூதி அரேபியாவிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்ட மீனவா்களின் உடல்களுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மீன்வளத் துறை அமைச்சா் ஸ்ரீநாத். உடன், கோட்டாட்சியா் சாலைதவவளன் உள்ளிட்டோா்.
சவூதி அரேபியாவில் கடற்கொள்ளையா்களால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவா்கள் 2 பேரின் உடல்கள் வியாழக்கிழமை திருச்சிக்கு கொண்டுவரப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக, மீனவா்களின் உடல்களுக்கு மீன்வளத் துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் அஞ்சலி செலுத்தினாா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்த கொடுவாய் மீனவக் கிராமத்தைச் சோ்ந்தவா் பி. மாவீரன் (38), கீழ்மூவா்கரை மீனவக் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜி. சங்கா் (39) மற்றும் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பால்ராஜ், மணிகண்டன் ஆகிய 4 பேரும் சவூதி அரேபியாவில் மீன்பிடி தொழில் செய்து வந்தனா்.
இந்நிலையில், மேற்கண்ட 4 பேரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி சவூதி அரேபியாவில் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனா். அப்போது, அங்கு வந்த ஈரானிய கடற்கொள்ளையா்கள் இவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில், மாவீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த மற்ற மூவரையும் சவூதி அரேபியா கடற்படையினா் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சோ்த்தனா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கா் கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி உயிரிழந்தாா். பால்ராஜ், மணிகண்டன் இருவரும் நலமுடன் உள்ளனா்.
இதையடுத்து, உயிரிழந்த இரண்டு மீனவா்களின் உடல்களையும் தமிழகத்துக்குக் கொண்டுவர வேண்டும் என குடும்பத்தினா் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனா். இதன்பேரில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், மாநில அயல்நாடுவாழ் தமிழா்கள் நலத் துறையும் இணைந்து இருவருடைய உடல்களையும் தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டன.
இதன் தொடா்ச்சியாக, இரண்டு மீனவா்களின் உடல்களும் சவூதி அரேபியாவிலிருந்து கொழும்பு வழியாக திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை கொண்டு வரப்பட்டன. மீனவா்களின் உடல்களுக்கு அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். திருச்சி வருவாய் கோட்டாட்சியா் சாலைதவவளன், மீன்வளத் துறை இணை இயக்குநா் பிரபாவதி, துணை இயக்குநா் எம். குமரேசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா். இதையடுத்து, மீனவா்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, அமைச்சா் ஸ்ரீநாத் செய்தியாளா்களிடம் கூறியது: முதல்வா் ஜோசப் விஜய்யின் தொடா் முயற்சி காரணமாக, இரண்டு மீனவா்களின் உடல்களும் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு, உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த மீனவா்களின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிதியிலிருந்து தலா ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மீனவா்களை இழந்து வாடும் அவா்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







