திருவண்ணாமலை, நவ. 13: தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டக் காவல் துறைக்கு ரூ.6 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும், காவல் துறையின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
காவலர்களுக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, புதிய குடியிருப்புகள், புதிய காவல் நிலையக் கட்டடங்கள் என பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் காவல்துறைக்கு என புதிதாக காவல் நிலையங்கள், டிஎஸ்பி அலுவலகங்கள், காவலர் குடியிருப்புகள் கட்டும்பணி நடந்து வருகிறது.
தொடர்ச்சியாக திருவண்ணாமலை மாவட்டத்திலும் காவல்துறைக்கு பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
புதிதாக ஏற்படுத்தப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை அலுவலகம் நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது. அதன் அருகே ரூ.2.96 கோடி செலவில் 60 காவலர் குடியிருப்புகள், 2 காவல் ஆய்வாளர்கள், 3 உதவி ஆய்வாளர்களுக்கான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
செய்யாறில் ரூ.16 லட்சத்தில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. வந்தவாசியில் ரூ.26 லட்சம் செலவில் புதிய காவல் நிலையமும், போளூரில் டிஎஸ்பி முகாம் அலுவலகம் மற்றும் இல்லம் ரூ.21.5 லட்சம் செலவிலும் கட்டப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் கிராமிய மற்றும் நகர்ப்புற காவல் நிலையங்கள் ஓரே மாதிரியாக கட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கிராம காவல் நிலையம் 2,346 சதுர அடி பரப்பிலும், நகர்ப்புற காவல் நிலையம் 3512 சதுர அடி பரப்பிலும், அனைத்து மகளிர் காவல் நிலையம் 2000 சதுர அடி பரப்பிலும் கட்ட விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய காவல் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
புதிய பணிகள் குறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறியது:
காவலர்களின் குடியிருப்புகள் மற்றும் புதிய காவல் நிலையங்களை வரும் டிசம்பர் மாதம் துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார் எனத் தெரிகிறது.
மேலும் செங்கத்தில் புதிய டிஎஸ்பி அலுவலகம் ரூ.26 லட்சத்திலும், திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய புதிய கட்டடம் ரூ.20 லட்சத்திலும், நகர காவல் நிலைய கட்டடம் ரூ.30 லட்சம் செலவிலும் கட்டப்பட்டு வருகிறது.
197 குடியிருப்புகள்: திருவண்ணாமலை நகரின் மையத்தில் முத்து விநாயகர் கோயில் தெருவில் உள்ள காவலர் குடியிருப்புகள் 70 ஆண்டுகளாக உள்ளன.
மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள அவற்றை இடித்துவிட்டு, புதிதாக ரூ.12.85 கோடி செலவில் 197 காவலர் குடியிருப்புகள் கட்ட அரசுக்கு மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் சந்தவாசலில் ரூ.90 லட்சம் செலவில் 22 காவலர் குடியிருப்புகளும், தெள்ளாற்றில் ரூ.1 கோடியில் 23 காவலர் குடியிருப்புகளும் கட்ட அனுமதி கோரியுள்ளோம்.
மேலும் மங்கலம், தச்சம்பட்டில் புதிய காவல் நிலையங்கள் கட்டப்பட உள்ளன என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.