மூடும் நிலையில் பொது சேவை மையங்கள்

ஒசூர், நவ.15:ஒசூரில் உள்ள பொது சேவை மையங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.   இந்த மையங்கள் மூலம் மக்களுக்கு தேவையான பட்டா, சிட்டா, மின் இணைப்புக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் உள்ளிட்ட சேவைகளை மக்களு
Updated on
1 min read

ஒசூர், நவ.15:ஒசூரில் உள்ள பொது சேவை மையங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

  இந்த மையங்கள் மூலம் மக்களுக்கு தேவையான பட்டா, சிட்டா, மின் இணைப்புக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் உள்ளிட்ட சேவைகளை மக்களுக்கு வழங்க தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை ஓராண்டுக்கு முன் தொடங்கி வைத்தார்.

  ஆனால் அரசு இந்த பொது சேவை மையங்களுக்கு எவ்வித சேவை வசதிகளையும் வழங்காததால், மையத்தைத் தொடங்கிய முகவர்கள் மூடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

  வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் 1,050 பொது சேவை மையங்கள் தொடங்கப்பட்டன.

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 ஊராட்சிகளுக்கு ஒரு பொது சேவை மையம் வீதம் 221 பொது சேவை மையங்கள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு மையத்திலும் 5 முதல் 10 கணினி மற்றும் இணையதள வசதி வைத்திருந்தவர்களுக்கு இந்த சேவை மையம் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.

  பட்டா, சிட்டா, மின் இணைப்புக் கட்டணம், தொலைபேசி கட்டணம், எல்ஐசி பிரிமியம், பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்காக இனி அரசு அலுவலகங்களுக்கு மக்கள் அலையும் சூழலை தவிர்க்கவே இந்த மையங்கள் தொடங்கப்பட்டன.  பொது சேவை மையத்தின் மூலம் ரூ.10 செலுத்தி பிறப்பு, இறப்பு, பட்டா, சிட்டா போன்ற 32 சேவைக்கான சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்படுவதாக திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பூங்கோதை தெரிவித்திருந்தார்.

  ஆனால் ஓராண்டாகியும், பொதுச் சேவை மையத்திற்கு, சான்றிதழ் அளிக்கும் உரிமையை அரசு வழங்காமல் உள்ளதால், மையம் தொடங்கிய முகவர்கள் சேவைகளை செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

  அலுவலக வாடகை, மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், வங்கிக் கடனுக்காக வட்டி உள்ளிட்டவைகளுக்காக மாதம்தோறும் ரூ.10 ஆயிரம் வீதம் செலவிட்டு வரும் முகவர்கள் தடுமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர்.

  மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தோஷ்பாபு மாற்றம் செய்யப்பட்டு வே.க. சண்முகம் அப்பொறுப்புக்கு வந்த நிலையில், திட்டம் கிடப்பில் உள்ளதாக பொது சேவை மைய முகவர்கள் குறை கூறுகின்றனர்.

  அரசு அலுவலகங்களில்  வாங்க வேண்டிய சான்றிதழ்களை ரூ.10 செலுத்தி பொது சேவை மையத்தின் மூலம் வாங்கலாம் என்ற பொதுமக்களின் கனவும் இத்திட்டம் செயல்படாததால் நனவாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com