ஒசூர், நவ. 1: ஒசூரில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதால் இரு, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர்.
கிருஷ்ணகிரி-ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒசூர் நகராட்சி முதல் புதிய பஸ் நிலையம் வரையிலும், பெங்களூர்-கிருஷ்ணகிரி சாலையில் ஐசிஐசிஐ வங்கி முதல் பாகலூர் சாலை சந்திப்பு வரையிலும் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கித் தவிக்கவேண்டிய நிலை உள்ளது.
இதேபோல, பாகலூர் சாலை முதல் தாலுகா அலுவலக சாலை வரையிலும், ஏரித் தெரு, பழைய பெங்களூர் சாலை, நேதாஜி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பெங்களூர் முழுவதும் பட்டாசு விற்க கர்நாடக நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து, சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் சில ஆண்டுகளாக ஒசூரில் மொத்த விற்பனை அங்காடி அமைத்து பட்டாசு விற்பனை செய்கின்றனர்.
ஒசூர்-பெங்களூர் சாலை, பாகலூர் சாலை உள்பட முக்கிய சாலைகளில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து அதிகமாக இருக்கும் பாகலூர் சாலையில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பட்டாசு கடைகள் வைக்கப்பட்டுள்ளன.
பட்டாசு வாங்க பெங்களூரில் இருந்து வரும் வாடிக்கையாளர்கள், தங்களது கார்களை சாலைகளிலேயே நிறுத்திவிட்டுச் செல்வதால் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சில நிமிடங்களில் கடக்க வேண்டியச் சாலைகளை, பல மணி நேரம் காத்திருந்து கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பெங்களூரில் இருந்து ஒசூர் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் பாகலூர் சாலை சந்திப்புக்கு வந்து, மீண்டும் ஒசூர் பஸ் நிலையம் செல்ல வேண்டியுள்ளது. மேலும், தாலுகா அலுவலக சாலை மற்றும் கிருஷ்ணகிரி சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் ஒரே நேரத்தில் பாகலூர் சாலை சந்திப்பில் கூடுவதே போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க முக்கிய காரணம்.
பெங்களூரில் இருந்து ஒசூர் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள், பாகலூர் சந்திப்பிற்கு வராமல் ஒசூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஆக்சீஸ் வங்கி எதிரில், மேம்பாலத்தின் கீழ் பஸ் நிலையத்திற்கு செல்ல புதிய வழி ஏற்படுத்தினால் நெரிசல் குறையும்.
தற்பொழுது பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் பஸ்களுக்காக மேம்பாலத்தின் கீழ், பாதை அமைத்தது போல, உள்ளே செல்லும் நுழைவு வாயிலின் எதிரிலும் மேம்பாலத்தின் கீழ் புதிய பாதை அமைத்தால் போக்குவரத்து நெரிசல் பாதியாக குறைந்து விடும்.
இப்பணியை நெடுஞ்சாலைத் துறையின் அனுமதி பெற்று ஒசூர் நகராட்சி உடனடியாக செய்ய வேண்டியது கட்டாயம். சில வாரங்களுக்கு முன்பு வரை காலை, மாலை நேரங்களில் மட்டுமே போக்குவரத்து நெரிசல் இருந்து வந்தது. தீபாவளி பட்டாசு கடைகள் மற்றும் வாகன பெருக்கம் காரணமாக, தற்பொழுது பகல் முழுவதுமே நேரிசல் ஏற்பட்டுள்ளது.
இதை கட்டுப்படுத்த போதுமான போலீஸôர் பணியில் அமர்த்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.