16 ஆண்டுகளாகியும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை: மத்திய உணவு தானியக் கிடங்கு பணியாளர்கள் வேதனை

ஒசூர், செப். 22: மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் (மத்திய உணவு தானியக் கிடங்கு) பணியாற்றிய 3,500 பணியாளர்கள் ஓய்வூதியம் கிடைக்காமல் கடந்த 16 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். 1957-ல் மத்திய அரசு இ
Published on

ஒசூர், செப். 22: மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் (மத்திய உணவு தானியக் கிடங்கு) பணியாற்றிய 3,500 பணியாளர்கள் ஓய்வூதியம் கிடைக்காமல் கடந்த 16 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.

1957-ல் மத்திய அரசு இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தானிய சேமிப்புக் கிடங்கை அமைத்தது. விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த நெல், கேழ்வரகு, கோதுமை உள்ளிட்ட தானியங்களை அறுவடை செய்யும் போது விலை குறைவாக இருந்தால் இந்தக் கிடங்குகளில் சேமித்து வைத்து விலை ஏற்றத்துக்குப் பிறகு விற்பனை செய்வார்கள்.

இந்நிறுவனம் 1971-72-ல் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளானபோது இந்திய உணவுக் கழகத்துடன் இணைக்க முயற்சித்தது. ஆனால் தொழிலாளர்களின் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு அது கைவிடப்பட்டது.  1980-ல் இந்நிறுவனம் ஏற்றுமதி, இறக்குமதி பொருள்களை கையாளத் தொடங்கியது. நவீன தொழில்நுட்ப உதவியுடன் பொருள்களை செம்மையாக பாதுகாக்க தொழில்நுட்பப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு, உணவு தானியங்களுக்கு மருந்து தெளித்து பாதுகாக்கும் பணியை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து இந்நிறுவனம் பாரத் மினி ரத்னா அந்தஸ்து பெற்றது.

  தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, விருதுநகர், மதுரை, சென்னை, ஈரோடு, கோவை, சிதம்பரம், தூத்துக்குடி, ஒசூர் மற்றும் புதுச்சேரி உள்பட 20 இடங்களில் இந்நிறுவனத்தின் கிடங்குகள் உள்ளன.

இந்நிலையில் 1994-ல் பி.வி.நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் மத்திய அரசு சிறப்பு விருப்ப ஓய்வு என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இதன் கவர்ச்சியில் சிக்கி பலர் விருப்ப ஓய்வு பெற்றனர். தானாக ஓய்வு பெற்றவர்களோடு சேர்த்து மொத்தம் 3,500 பணியாளர்கள் அப்போது ஓய்வு பெற்றனர்.  இந்நிறுவனத்தில் 20 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள் பணியாற்றிய பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வின் போது ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

  இது போன்று தமிழகத்தில் மட்டும் 850 பணியாளர்கள் உள்ளனர். ஓய்வூதியம் கிடைக்காமல் இவர்கள் வறுமையில் வாடி வருகின்றனர்.  ஓய்வு பெற்றவர்களில் பலர் 60 வயதை தாண்டியவர்களாக உள்ளனர். இதில் சிலர் உயிரிழந்து விட்டனர்.

இந்நிலையில் ஓய்வூதியம் கோரி அக்டோபர் 15-ம் தேதி சென்னை சிந்தாதிரிப்பேட்டை காயிதேமில்லத் மணி மண்டபம் எதிரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக சங்கச் செயலாளர் சுப்பையா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com