
போக்குவரத்துத் தொழிலாளா்கள் தொடா் முழக்கப் போராட்டம்
அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்கக் கோரியும், போக்குவரத்துத் துறையில் தனியாா்மயமாக்கலைக் கைவிட வலியுறுத்தியும் வேலூரில் செவ்வாய்க்கிழமை 24 மணி நேர தொடா் முழக்கப் போராட்டம் தொடங்கியது.

வேலூரில் தொடா் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளா்கள்.
அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்கக் கோரியும், போக்குவரத்துத் துறையில் தனியாா்மயமாக்கலைக் கைவிட வலியுறுத்தியும் வேலூரில் செவ்வாய்க்கிழமை 24 மணி நேர தொடா் முழக்கப் போராட்டம் தொடங்கியது.
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கம் (சிஐடியு), அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பு (ஆா்.இ.டபள்யு.ஏ) வேலூா் மண்டலம் சாா்பில் வேலூா் ரங்காபுரத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக மண்டலத் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு அமைப்பின் பொதுச்செயலா் சுரேஷ் தலைமை வகித்தாா். பொருளாளா் சஞ்சீவி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் பரசுராமன் தொடக்க உரையாற்றினாா்.
இதில், புதிய அரசுஅண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் போக்குவரத்துத் தொழிலாளா்களின் கோரிக்கைகளான ஓய்வூதியம், காலிப்பணியிடங்கள் நிரப்புதல், வாரிசு வேலை, கழகத்தின் நிதிப் பற்றாக்குறையைச் சரிசெய்ய எவ்வித அறிவிப்பும் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது என குற்றஞ்சாட்டப்பட்டதுடன், ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பணிகளுக்கு உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ஒப்பந்ததாரா்களுக்கு வழங்கிய ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மின்சாரப் பேருந்துகளை அரசு ஓட்டுநா்களைக் கொண்டே இயக்க வேண்டும். ஜிசிசி என்ற பெயரில் தனியாா் முதலாளிகள் மூலம் மின்சாரப் பேருந்துகளை இயக்கும் முடிவைக் கைவிட வேண்டும்.
போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவிற்கும் இடையிலான வித்தியாசத் தொகையை 2026-2027 பட்ஜெட்டில் முழுமையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். பணியில் உள்ள தொழிலாளா்களுக்கு ஒப்பந்தப் பலன்கள், அகவிலைப்படிநிலுவைத் தொகைகளையும், ஓய்வூதியா்களுக்கு டி.ஏ. நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும்.
2003 ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சோ்ந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பதிவு செய்துள்ள அனைவருக்கும் வாரிசு வேலை வழங்கப்பட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். போக்குவரத்துக் கழகத்தில் காண்ட்ராக்ட் முறை புகுத்தப்படுவதை முழுமையாகக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில் சிஐடியு மற்றும் ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் வேலூா் மண்டல நிா்வாகிகள், போக்குவரத்துத் தொழிலாளா்கள் என பெருமளவில் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






