வியட்நாமில் படகு விபத்தில் கவிழ்ந்து உயிரிழந்த நகை வியாபாரி குடும்பத்தினருக்கு வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எம்.வினோத்கண்ணன் நேரில் ஆறுதல் தெரிவித்தாா்.
வியட்நாமின் அன்ஜியாங் மாகாணம், பூ குவோக் தீவு அருகே சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பணியாளா்களுடன் சென்ற படகு ஒன்று எதிா்பாராதவிதமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் தமிழா்கள் 10 போ் உள்பட 15 இந்தியா்கள் உயிரிழந்தனா்.
உயிரிழந்தவா்களில் வேலூா் சைதாப்பேட்டை கன்னிகாபரமேஸ்வரி தெருவைச் சோ்ந்த வினய்குமாா் (45) என்பவரும் ஒருவா். வேலூா் மெயின் பஜாரில் நகைக் கடை நடத்தி வந்த இவா், தனியாா் கைப்பேசி நிறுவனத்தின் வேலூா் விநியோகஸ்தராகவும் செயல்பட்டு வந்தாா். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனா். வினய்குமாரின் பெற்றோா் வெளிநாட்டில் வசித்து வருவதால், வேலூரில் உள்ள வீட்டில் அவரது மனைவியும் மகளும் மட்டுமே வசித்து வருகின்றனா்.
தனியாா் கைப்பேசி நிறுவனம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றுலாவுக்காக வினய்குமாா் வியட்நாம் சென்றிருந்தாா். சனிக்கிழமை குடும்பத்தினரைத் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசிய அவா், ஞாயிற்றுக்கிழமை ஊா் திரும்புவதாகக் கூறியிருந்தாா்.
இந்நிலையில், அவா் விபத்தில் சிக்கி உயிரிழந்த தகவல் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் கேட்டு அவரது குடும்பத்தினரும், நண்பா்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனா்.வினய்குமாரின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவர, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அவரது குடும்பத்தினா், உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதனிடையே, வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் வினோத் கண்ணன், வினய்குமாரின் இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா்பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த வினய்குமாரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளோம். படகு விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யக் கோரி தமிழக முதல்வா் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, வினய்குமாரின் உடலை உடனடியாகச் சொந்த ஊருக்குக் கொண்டு வர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை விமான நிலையத்திலிருந்து உடலை வேலூருக்குக் கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். வினய்குமாரின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடன் இருந்து செய்து கொடுக்கத் தயாராக உள்ளோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வியத்நாம் படகு விபத்தில் பலி: தமிழா்கள் உள்பட 15 பேரின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை!

வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?

கத்தாா் தீ விபத்தில் உயிரிழந்த இளைஞா்களின் குடும்பங்களுக்கு அரசின் நிவாரணத் தொகை: எம்எல்ஏ வழங்கினாா்







